Home » இணைச் சட்டம் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர்.

2குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.

3அவனுக்கு நாற்பது அடிகள் கொடுக்கலாம்; அதற்குமேல் வேண்டாம். அதற்குமேல் அடித்தால் உன் கண்களுக்கு முன்பாக உன் இனத்தான் மானமிழந்தவன் ஆவான்.

4போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே.

இறந்த சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமை

5உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அந்நியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.

6அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது.

7இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, ‘தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை’ என்று கூறுவாள்.

8அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக ‘அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினால்

9அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, ‘தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்’ என்று கூறுவாள்.

10இஸ்ரயேலில் அவனது பெயர் ‘மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு’ என்றழைக்கப்படும்.

பிற சட்டங்கள்

11ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகையில், ஒருவனுடைய மனைவி, தன் கணவனை, அவனை அடிப்பவனின் கையிலிருந்து விடுவிப்பதற்காக வந்து, கையை நீட்டி, மற்றவனது ஆண்குறியைப் பிடிப்பாளாகில்,

12அவளுடைய கையைத் துண்டிப்பாய். அவளுக்கு இரக்கம் காட்டாதே.

13பெரியதும் சிறியதுமான ஏமாற்று எடைக்கற்களை உன் பையில் வைத்திருக்காதே.

14பெரியதும் சிறியதுமான ஏமாற்று முகத்தல் அளவைகளை உன் வீட்டில் வைத்திருக்காதே.

15நிறைவான நேர்மையான எடைக்கற்கள் உன்னிடம் இருக்கட்டும். நிறைவான நேர்மையான முகத்தல் அளவைகள் உன்னிடம் இருக்கட்டும். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் உன் நாள்கள் நீடித்திருக்கும்; நீ நெடுநாள் வாழ்வாய்;

16மாறாக, மேற்குறிப்பிட்டவற்றில் நேர்மையற்று நடப்போர் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்.

அமலேக்கியரைக் கொல்வதற்கான கட்டளை

17நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் அமலேக்கு உனக்குச் செய்ததை நினைவில் இருத்து.

18நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில், அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை.

19ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவர், உனது உரிமைச் சொத்தாக உடைமையாக்கிக் கொள்ளுமாறு உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைச் சுற்றியுள்ள பகைவர் அனைவரையும் உனக்குக் கீழ்ப்படுத்தி, உனக்கு ஓய்வு தரும்போது, அமலேக்கின் நினைவு வானத்தின் கீழ் இல்லாதவாறு அழிக்க வேண்டும். இதை மறந்துவிடாதே!


25:3 2 கொரி 11:24.
25:4 1 கொரி 9:9; 1 திமோ 5:18.
25:5-6 மத் 22:24; மாற் 12:19; லூக் 20:28.
25:7-10 ரூத் 7:4-8.
25:13-16 லேவி 19:35-36.
25:17-19 விப 17:8-14; 1 சாமு 15:2-9.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks