பாரூக்கு அதிகாரம் – 4 – திருவிவிலியம்

பாரூக்கு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஞானமே கடவுளுடைய

கட்டளைகள் அடங்கிய நூல்;

என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம்.

அதைக் கடைப்பிடிப்போர்

அனைவரும் வாழ்வர்;

அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.

2யாக்கோபே, திரும்பி வா;

ஞானத்தை ஏற்றுக்கொள்;

அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட,

3உனது மாட்சியை

மற்றவருக்கு விட்டுக்கொடாதே;

உன் சிறப்புரிமைகளை வேற்று

மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே.

4இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்;

ஏனெனில் கடவுளுக்கு உகந்தது

எது என்பதை நாம் அறிவோம்.

எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும்

புலம்பல்

5இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும்

என் மக்களே, வீறுகொள்வீர்.

6நீங்கள் வேற்றினத்தாரிடம்

விற்கப்பட்டது உங்கள்

அழிவிற்காக அன்று; நீங்கள்

கடவுளுக்குச் சினமூட்டியதால்தான்

பகைவரிடம்

ஒப்படைக்கப்பட்டீர்கள்.

7கடவுளை விடுத்துப் பேய்களுக்குப்

பலியிட்டதால் உங்களைப்

படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள்.

8உங்களைப் பேணிக் காத்துவந்த

என்றுமுள கடவுளை மறந்தீர்கள்;

உங்களை ஊட்டிவளர்த்த

எருசலேமை வருத்தினீர்கள்;

9கடவுளின் சினம் உங்கள்மீது

வரக்கண்டு எருசலேம் கூறியது:

“சீயோன் அண்டை நாட்டவரே,

கேளுங்கள்; கடவுள் எனக்குப்

பெருந்துயர் அனுப்பியுள்ளார்.

10ஏனெனில் என்றுமுள்ளவர்

என் புதல்வர், புதல்வியர் மீது

சுமத்திய அடிமைத்தனத்தை

நான் கண்டேன்.

11மகிழ்ச்சியோடு நான் அவர்களைப்

பேணி வளர்த்தேன்;

ஆனால் அழுகையோடும்

துயரத்தோடும் அனுப்பி வைத்தேன்.

12நானோ கைம்பெண்;

எல்லாராலும் கைவிடப்பட்டவள்.

என்பொருட்டு யாரும்

மகிழ வேண்டாம்; என் மக்களின்

பாவங்களை முன்னிட்டு நான்

தனிமையில் விடப்பட்டுள்ளேன்.

ஏனெனில் அவர்கள் கடவுளின்

சட்டத்தைவிட்டு விலகிச்

சென்றார்கள்.

13கடவுளுடைய நெறிமுறைகளை

அவர்கள் அறிந்திலர்;

அவருடைய கட்டளைகளின்

வழியில் சென்றிலர்;

நற்பயிற்சியின் நெறியில்

அவர்தம் நீதியின்படி நடந்திலர்.

14“சீயோனின் அண்டை

நாட்டார் கூடிவரட்டும்;

என் புதல்வர், புதல்வியர்மீது

என்றுமுள்ளவர் சுமத்திய

அடிமைத் தனத்தை

எண்ணிப்பார்க்கட்டும்.

15ஏனெனில் அவர்களுக்கு

எதிராய்த் தொலையிலிருந்து

ஒரு நாட்டையும் வேற்று மொழி

பேசும் இரக்கமற்ற மக்களினத்தையும்

கடவுள் கொண்டு வந்தார்.

அவர்கள் முதியோரை மதிக்கவில்லை.

சிறுவர்களுக்கு இரக்கங் காட்டவில்லை.

16கைம்பெண்ணின் அன்பு

மைந்தர்களைக் கடத்திச்

சென்றார்கள்; புதல்வியரிடமிருந்து

அவளைப் பிரித்து, தனிமையில்

விட்டுச் சென்றார்கள்.

17“நானோ உங்களுக்கு

எவ்வகையில் உதவ இயலும்?

18இக்கேடுகளை உங்களுக்கு

வருவித்தவரால்தான் உங்கள்

பகைவரிடமிருந்து உங்களை

விடுவிக்க இயலும்.

19போங்கள், என் மக்களே,

உங்கள் வழியே போங்கள்.

நான் கைவிடப்பட்டவள்.

20அமைதிக்குரிய ஆடைகளைக்

களைந்துவிட்டேன்;

மன்றாட்டுக்குரிய சாக்கு

உடை அணிந்துள்ளேன்;

என்றுமுள்ளவரை நோக்கி

என் வாழ்நாள்

முழுவதும் கூக்குரலிடுவேன்.

21“என் பிள்ளைகளே, வீறுகொள்வீர்;

கடவுளை நோக்கிக்

கூக்குரலிடுவீர். பகைவரின்

ஆற்றலினின்றும்

கைவன்மையினின்றும் அவர்

உங்களை விடுவிப்பார்.

22என்றுமுள்ளவர் உங்களை மீட்பார்

எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

தூயவரிடமிருந்து

எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது;

ஏனெனில், என்றுமுள உங்கள்

மீட்பர் விரைவில் உங்களுக்கு

இரக்கங் காட்டுவார்.

23நான் உங்களைத் துயரத்தோடும்

அழுகையோடும் அனுப்பி வைத்தேன்.

கடவுளோ முடிவில்லா

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்

உங்களை மீண்டும் என்னிடம்

அழைத்து வருவார்.

24உங்கள் அடிமைத்தனத்தை

இப்பொழுது காண்பதுபோன்று

உங்கள் கடவுளிடமிருந்து வரவிருக்கும்

மீட்பையும் சீயோனின் அண்டை நாட்டார்

விரைவில் காண்பர்.

அம்மீட்பு மிகுந்த மாட்சியோடும்

என்றுமுள்ளவரின் போரொளியோடும்

உங்களை வந்தடையும்.

25என் மக்களே,

கடவுளிடமிருந்து உங்கள் மீது

வந்துற்ற சினத்தைப் பொறுமையோடு

தாங்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் பகைவர் உங்களைத்

துன்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்களது அழிவை

நீங்கள் விரைவில் காண்பீர்கள்;

அவர்களை ஏறி மிதிப்பீர்கள்.

26செல்லமாய் வளர்க்கப்பெற்ற

என் மக்கள் கரடு முரடான

பாதையில் நடந்தார்கள்; பகைவர்

கவர்ந்து செல்லும் ஆட்டு

மந்தைபோன்று அவர்கள்

கடத்திச்செல்லப்பட்டார்கள்.

27“என் மக்களே, வீறுகொள்வீர்;

கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர்.

இத்துயரங்களை

உங்கள்மீது அனுப்பி வைத்தவர்

உங்களை நினைவுகூர்வார்.

28கடவுளைவிட்டு அகன்று

செல்வதில் முன்பு நீங்கள்

முனைந்து நின்றீர்கள்.

அதைவிடப் பன்மடங்கு

ஆர்வத்துடன் அவரைத் தேடும்

பொருட்டு இப்பொழுது அவரிடம்

திரும்பி வாருங்கள்.

29ஏனெனில், இக்கேடுகளை

உங்கள் மீது வரச்செய்தவரே

உங்களுக்கு முடிவில்லா

மகிழ்ச்சியையும் மீட்பையும்

அருள்வார்.”

நம்பிக்கை

30எருசலேம், வீறுகொள்.

இப்பெயரைக் கொடுத்தவரே

உனக்கு ஆறுதல் வழங்குவார்.

31உன்னைத் துன்புறுத்தி

உன் வீழ்ச்சி கண்டு

மகிழ்ந்தோர் இரங்கத்தக்கவர்;

32உன் மக்கள் அடிமைகளாய்

இருந்த நகர்களும்

இரங்கத்தக்கவை; உன்

மைந்தர்களை அடிமைகளாய்

ஏற்றுக்கொண்ட

நகரும் இரங்குதற்குரியது.

33உன் வீழ்ச்சி கண்டு

அது மகிழ்ந்ததுபோல,

உன் அழிவு கண்டு இன்புற்றது போல,

தன் பாழ்நிலை கண்டு அது

பெருந்துயர் அடையும்.

34அதனுடைய மக்கள்திரளில்

அது கொண்ட இறுமாப்பை

அகற்றிவிடுவேன்; அதன்

செருக்கை அழுகையாய்

மாற்றி விடுவேன்.

35என்றுமுள்ளவரிடமிருந்து நீண்டநாள்

அதன்மேல் நெருப்பு வந்து விழும்;

பன்னெடுங் காலம் அது பேய்களின்

இருப்பிடமாய் அமையும்.

36எருசலேமே, கீழ்த்திசையை நோக்கு;

கடவுளிடமிருந்து உனக்கு

வரும் மகிழ்ச்சியைப் பார்.

37உன்னை விட்டுப் பிரிந்துசென்ற

உன் மைந்தர்கள் இதோ!

திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்;

கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை

உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்

தூயவரின் சொல்லால்

ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுளின்

மாட்சியில் திளைத்த வண்ணம் வந்து

கொண்டிருக்கின்றார்கள்.


4:1 சீஞா 24:23.
4:6 எசா 50:1.
4:7 இச 32:17.
4:37 எசா 60:4.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post