Home » ஆமோஸ் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு:

2“சீயோனிலிருந்து ஆண்டவர்

கர்ச்சனை செய்கின்றார்;

எருசலேமிலிருந்து அவர்

முழங்குகின்றார்;

இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள்

தீய்ந்து போகின்றன;

கர்மேல் மலையின் உச்சியும்

காய்ந்து போகின்றது”.

வேற்றினத்தார்மீது ஆண்டவரின் தீர்ப்பு

தமஸ்கு நகர்

3ஆண்டவர் கூறுவது இதுவே:

தமஸ்கு நகரினர்

எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக,

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்.

ஏனெனில், அவர்கள் கிலயாதை

இரும்புக் கருவிகளைக் கொண்டு

போராடித்தார்கள்.

4ஆதலால் அசாயேல் வீட்டின்மேல்

தீ மூளச் செய்வேன்.

அது பெனதாது கோட்டைகளை

விழுங்கிவிடும்.

5தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.

பிக்காத்தாவேனில்

குடியிருப்பவர்களையும்

பெத்ஏதேனில் செங்கோல்

பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.

ஆராமின் மக்கள்

கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்”

என்கிறார் ஆண்டவர்.

பெலிஸ்தியா நாடு

6ஆண்டவர் கூறுவது இதுவே:

“காசா நகரினர் எண்ணற்ற

குற்றங்கள் செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்.

அவர்கள் ஒரு முழு இனத்தையே

ஏதோமுக்கு அடிமைகளாகக்

கையளித்தார்கள்;

7ஆதலால் காசாவின்

கோட்டை மதில்கள்மேல்

நெருப்பைக் கொட்டுவேன்.

அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.

8அஸ்தோதில் குடியிருப்பவர்களையும்

அஸ்கலோனில் செங்கோல்

பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்;

எக்ரோனுக்கு எதிராக

என் கையை ஓங்குவேன்;

பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும்

அழிந்திடுவர்” என்கிறார்

ஆண்டவராகிய என் தலைவர்.

தீர் நகர்

9ஆண்டவர் கூறுவுது இதுவே:

“தீர் நகரினர் எண்ணற்ற

குற்றங்கள் செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்;

ஏனெனில், அவர்கள்

ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு

அடிமைகளாகக் கையளித்தார்கள்;

சகோதர உடன்படிக்கையை

அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.

10ஆதலால் தீரின் கோட்டை

மதில்கள் மேல்

நெருப்பைக் கொட்டுவேன்;

அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.”

ஏதோம் நாடு

11ஆண்டவர் கூறுவது இதுவே:

“ஏதோம் எண்ணற்ற

குற்றங்கள் செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்;

ஏனெனில், அவன் உறவுமுறையின்

கடமைகளை மீறி வாளேந்தித்

தன் சகோதரனையே துரத்தினான்;

தன் ஆத்திரத்தை

அடக்கி வைக்காமல் என்றென்றும்

கோபத்தைக் காட்டி வந்தான்.

12ஆதலால் தேமான்மேல்

நெருப்பைக் கொட்டுவேன்;

அது பொட்சராவின் கோட்டைகளை

விழுங்கிவிடும்.

அம்மோனியர் நாடு

13ஆண்டவர் கூறுவது இதுவே:

“அம்மோன் மக்கள்

எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்;

ஏனெனில், அவர்கள்

தங்கள் நாட்டு எல்லைகளை

விரிவுபடுத்துவதற்காகக்

கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப்

பீறிக் கிழித்தார்கள்.

14ஆதலால், இராபாவின் கோட்டை

மதில்கள்மேல்

நெருப்பைக் கொட்டுவேன்.

அது அச்சுவர்களை விழுங்கி விடும்;

அப்பொழுது, போர்க்காலத்தின்

பேரிரைச்சலும், சூறாவளி நாளின்

கடும் புயலும் இருக்கும்.

15அவர்களுடைய அரசன்

அடிமையாய்க்

கொண்டு போகப்படுவான்.

அவனோடு அதிகாரிகளும்

கொண்டு போகப்படுவார்கள்”

என்கிறார் ஆண்டவர்.


1:1 2 அர 15:1-7; 2 குறி 26:1-23; 2 அர 14:23-29.
1:2 யோவே 3:16.
1:3-5 எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1.
1:6-8 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7.
1:9-10 எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.
1:11-12 எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2-5.
1:13-15 எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11.


1:3 * ‘மூன்றும் நான்குமாகிய’ என்பது பொருள்.
1:5 * எபிரேயத்தில், ‘சிற்றின்ப இல்லம்’ என்பது பொருள்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks