back to top
HomeTamil2 குறிப்பேடு அதிகாரம் - 29 - திருவிவிலியம்

2 குறிப்பேடு அதிகாரம் – 29 – திருவிவிலியம்

2 குறிப்பேடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யூதாவின் அரசர் எசேக்கியா
(2 அர 18:1-3)

1எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய்.

2அவர் தம் மூதாதையான தாவீதைப் போல் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்தார்.

திருக்கோவில் தூய்மைப் படுத்தப்படல்

3அவர் தம் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரின் இல்லக் கதவுகளைத் திறந்து, அவற்றைப் பழுதுபார்த்தார்.

4குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார்.

5அவர் அவர்களை நோக்கி, “லேவியரே, கேளுங்கள்; இப்பொழுது நீங்கள் உங்களையே தூய்மைப்படுத்திக்கொண்டு, உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்துங்கள், திருத்தலத்தின் எல்லாத் தீட்டுகளையும் அகற்றுங்கள்.

6ஏனெனில், நம் தந்தையர் துரோகம் செய்து, நம் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தனர்; அவரைப் புறக்கணித்து, ஆண்டவரின் திருஉறைவிடத்திலிருந்து தங்கள் முகங்களைத் திருப்பி, முதுகைக் காட்டினர்.

7அவர்கள், திருத்தலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர்.

8அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்; அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்!

9இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்; நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர்.

10இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது; அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும்.

11ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்; ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.

12அதைக் கேட்ட கோகாத்து புதல்வரில் அமாசாயின் மகன் மகாத்து. அசரியாவின் மகன் யோவேல், மெராரி புதல்வரில் அப்தியின் மகன் கீசு, எகல்லேலின் மகன் அசரியா, கெர்சோனியரில் சிமமாவின் மகன் யோவாகு, யோவாகின் மகன் ஏதேன்,

13எலிசாப்பான் புதல்வரில் சிம்ரியும் எயூயேலும், ஆசாபு புதல்வரில் செக்கரியாவும் மத்தனியாவும்,

14ஏமான் புதல்வரில் எகுவேலும் சிமயியும், எதுத்தூன் புதல்வரில் செமாயாவும், உசியேலும் ஆகிய லேவியர் எழுந்து,

15தங்கள் சகோதரர்களை ஒன்றுதிரட்டி, தங்களையே தூய்மைப்படுத்தியபின், அரச கட்டளைக்கும் ஆண்டவரின் வாக்குக்கும் ஏற்ப ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்த நுழைந்தனர்.

16ஆண்டவரின் இல்லத்தின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்த குருக்கள் உள்ளே சென்று, திருக்கோவிலில் கண்ட தீட்டான எல்லாவற்றையும் அதன் மண்டபத்திற்குக் கொண்டு வந்தனர். லேவியர் அவற்றை எடுத்துக் கிதரோன் பள்ளத்தாக்கில் கொட்டினர்.

17முதல் மாதத்தின் முதல் நாளில் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். மாதத்தின் எட்டாம் நாள் ஆண்டவரின் மண்டபத்திற்கு வந்து, ஆண்டவரின் இல்லத்தை எட்டு நாளில் தூய்மைப்படுத்தினர். ஆக, முதல் மாதத்தின் பதினாறாம் நாளில் இப்பணியை முடித்தனர்.

திருக்கோவிலின் மறு அர்ப்பணம்

18அரசர் எசேக்கியாவிடம் அவர்கள் வந்து, “ஆண்டவரின் இல்லத்தை முழுமையாக நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்; எரிபலி பீடத்தையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், திருமுன்னிலை அப்ப மேசையையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும்,

19ஆகாசு தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் செய்து புறக்கணித்திருந்த எல்லாக் கலன்களையும் தூய்மைப்படுத்தி, ஆண்டவரின் பலிபீடத்துக்கு முன்பாக அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறோம்” என்றனர்.

20அரசர் எசேக்கியா அதிகாலையில் எழுந்து, நகரத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார்.

21அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.

22அவர்கள் காளைகளை வெட்ட, குருக்கள் அவற்றின் குருதியைப் பிடித்துப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்கிடாய்களை வெட்டி, அவற்றின் குருதியையும் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்குட்டிகளையும் வெட்டி அவற்றின் குருதியையும் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்;

23அடுத்து, பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக் கிடாய்களை அரசனுக்கும் மக்கள் சபைக்கும் முன்பாகக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் கைகளை விரித்தனர்.

24“இஸ்ரயேலர் அனைவருக்காகவும் எரிபலியும் பாவம்போக்கும் பலியும் செலுத்தவேண்டும்” என்று அரசர் கூறியிருந்ததால், குருக்கள் அவற்றை வெட்டி அவற்றின் குருதியைப் பலிபீடத்தில் தெளித்து, இஸ்ரயேலர் அனைவருக்காகவும் பாவம்போக்கும் பலியை நிறைவேற்றினர்.

25தாவீதின் கட்டளைப்படியும், அரசரின் காட்சியாளர் காத்து, இறைவாக்கினர் நாத்தான் ஆகியோரின் கட்டளைப்படியும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைக்கும் லேவியரை ஆண்டவரின் இல்லத்தில் எசேக்கியா நியமித்திருந்தார். ஏனெனில், ஆண்டவரே இக்கட்டளையைத் தமது இறைவாக்கினர்கள் வாயிலாக அளித்திருந்தார்.

26அதனால், தாவீதின் இசைக்கருவிகளுடன் லேவியரும், எக்காளத்துடன் குருக்களும் அங்கே நின்றிருந்தனர்.

27பின்னர், எரிபலியைப் பீடத்தின்மேல் நிறைவேற்றுமாறு எசேக்கியா கட்டளையிட்டார்; அப்பலியைச் செலுத்தத் தொடங்கியபோது, இஸ்ரயேலரின் அரசர் தாவீதின் இசைக்கருவிகளுடனும் எக்காளத்துடனும் ஆண்டவருக்கான புகழ்ப்பாடல் தொடங்கியது.

28எரிபலி நிறைவேறு மட்டும் பாடகர்கள்பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர்.

29அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர்.

30தாவீதின் வார்த்தைகளிலும், திருக்காட்சியாளர் ஆசாபின் மொழிகளிலும் ஆண்டவரைப் புகழுமாறு அரசர் எசேக்கியாவும் தலைவர்களும் லேவியர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழ்ந்து தலைவணங்கி வழிபட்டனர்.

31அப்பொழுது எசேக்கியா அவர்களை நோக்கி, “இதோ நீங்கள் ஆண்டவருக்கென உங்களையே அர்ப்பணித்துள்ளீர்கள்; ஆதலால், அணுகி வாருங்கள், ஆண்டவரின் இல்லத்துக்குப் பலிகளையும் நன்றிப்பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அப்பொழுது மக்கள் சபையார் பலிகளையும், நன்றிப்பலிகளையும் கொண்டு வந்தனர், விரும்பியோர் பலர் எரிபலிகளையும் கொண்டுவந்தனர்.

32மக்கள் சபையார் கொண்டுவந்த எரிபலிகளின் மொத்த எண்ணிக்கை; எழுபது காளைகள், நூறு ஆட்டுக் கிடாய்கள், இருநூறு ஆட்டுக்குட்டிகள், இவையாவும் ஆண்டவருக்கான எரிபலி.

33இவற்றுடன் அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் அர்ப்பணித்தனர்.

34குருக்கள் சிலரே இருந்ததால், எரிபலிகளுக்கான எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்தும்வரை அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களான லேவியர் உதவி செய்தனர். ஏனெனில், குருக்களைவிட லேவியர் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதில் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர்.

35ஏராளமான எரிபலிகளுடன், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பும், எரிபலிக்கான நீர்மப் படையல்களும் இருந்தன. இவ்வாறு, ஆண்டவரின் இல்ல வழிபாடு மறுமலர்ச்சி அடைந்தது.

36தன் மக்களுக்காகக் கடவுள் ஆற்றியது குறித்து எசேக்கியாவும், எல்லா மக்களும் மகிழ்ந்தனர். ஏனெனில், இவையாவும் மிக விரைவாய் நடந்தேறின.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks