Home » திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 20, 2025

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 20, 2025

பொதுக்காலம் 20ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார்.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15

அந்நாள்களில்

செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் ‘சிலைத் தூண் கருவாலி’ மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.

இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்றுகொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: “செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார். மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், ‘எங்களை அரசாளும்’ என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம், ‘எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக்கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் அத்தி மரத்திடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. அத்தி மரம் அவற்றிடம், ‘எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?’ என்றது.

மரங்கள் திராட்சைக் கொடியிடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம், ‘தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், ‘வாரும் எங்களை அரசாளும்’ என்றன. முட்புதர் மரங்களிடம், ‘உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்’ என்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 21: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்.

1ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!2அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. – பல்லவி

3உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.4அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். – பல்லவி

5நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.6உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2025 செப் ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2025 2026
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks