back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - ஆகஸ்ட் 18, 2025

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 18, 2025

பொதுக்காலம் 20ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச் செய்தார். ஆயினும் மக்கள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 2: 11-19

அந்நாள்களில்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர். அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர். அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.

இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக் கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற் போயிற்று. ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.

ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச் செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர். ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து நடந்த நெறியை விட்டு விரைவில் விலகினர்.

ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச் செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில் துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்த பொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரை விட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டு அகலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 106: 34-35. 36-37. 39-40. 43,44 (பல்லவி: 4a)

பல்லவி: உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூரும்!

34ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை.35வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். – பல்லவி

36அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.37அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர். – பல்லவி

39அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள்மூலம் வேசித்தனம் செய்தனர்.40எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கு எதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். – பல்லவி

43பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.44எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

அக்காலத்தில்

செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.

அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.

அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2025 செப் ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2025 2026
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks