Home » இணைச் சட்டம் அதிகாரம் – 33 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரம் – 33 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள்

1கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:

2ஆண்டவர் சீனாயினின்று வந்தார்;

சேயிரினின்று அவர்களுக்குத்

தோன்றினார்;

பாரான் மலையினின்று

அவர்கள் மீது ஒளிர்ந்தார்;

பல்லாயிரம் புனிதர் புடைசூழ

வந்தார்;

அவரது வலப்புறத்தினின்று

மின்னல் ஒளிர் திருச்சட்டம்

ஏந்திவந்தார்.

3உண்மையாகவே, மக்களினங்களின்

அன்பர் அவர்;

அவர்தம் புனிதர்கள் அவர்

கையில் உள்ளனர்.

அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்;

அனைவரும் அவரது கூற்றுகளை

ஏற்றுக்கொள்வர்.

4மோசே எங்களுக்குத்

திருச்சட்டத்தைக் கட்டளையாக

வழங்கினார்; அதுவே யாக்கோபினது

திருக்கூட்டத்தின் உடைமை.

5மக்கள் தலைவர்களும்

இஸ்ரயேலின் குலங்களும்

ஒன்று திரட்டப்பட்டபொழுது

அவர் எசுரூன்மீது அரசனாய்

இருந்தார்.

6ரூபன் வாழட்டும்; அவன்

மடிந்து போகாதிருக்கட்டும்;

அவன்தன் புதல்வர்

குறையாதிருக்கட்டும்!

7யூதாவுக்கான ஆசி இதுவே.

அவர் கூறியது:

ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்;

அவனை அவனுடைய மக்களிடம்

கொண்டு வாரும்;

அவனது கைகள் அவனுக்குப்

போதுமானது ஆகட்டும்.

அவனுக்குத் துணை நின்று

அவனுடைய பகைவரிடமிருந்து

காத்தருளும்.

8லேவியைக் குறித்து அவர் கூறியது:

ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம்

என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு

மெரிபாவின் நீரூற்றருகில்

வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம்

இருக்கட்டும்.

9அவனிடமே அவற்றைக் கொடும்;

ஏனெனில் அவன் தன் தந்தையையும்

தாயையும் நோக்கி ‘நான்

உங்களைப் பாரேன்’ என்றவன்;

தன் சகோதரர்களை அடையாளம்

கண்டு கொள்ளாதவன்;

தன் சொந்தப் பிள்ளைகளையே

அறியாதவன்; உம் வார்த்தைகளைக்

கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை

நிறைவேற்றுபவன்;

10யாக்கோபுக்கு உம்

நீதிமுறைமைகளையும்

இஸ்ரயேலுக்கு உம் திருச்

சட்டத்தையும் கற்றுத்தருபவன்;

உமது முன்னிலையில் தூபம்

காட்டுபவன்;

உமது பீடத்தில் எரிபலிகளைச்

செலுத்துபவன்.

11ஆண்டவரே, அவனது ஆற்றலை

ஆசியால் நிரப்பும்;

அவனுடைய கரங்களின் உழைப்பை

ஏற்றுக்கொள்ளும்;

அவனுக்கு எதிராக எழும்புவோரை

அவர்களின் இடுப்பு ஒடிந்து

விழும் வண்ணம் வதையும்.

அவனைப் பகைப்பவர் மீண்டும்

எழாதவாறு செய்யும்.

12பென்யமினைக் குறித்து அவர்

கூறியது:

ஆண்டவரின் அன்புக்கு உரியவன்;

அவரால் அவன் பாதுகாப்புடன்

வாழ்வான்.

எக்காலமும் அவனை அவர்

அரவணைத்துக் காப்பார்;

அவர்தம் கரங்களுக்கிடையே

அவன் வாழ்வான்.

13யோசேப்பைக் குறித்து அவர் கூறியது:

அவனது நிலம் ஆண்டவரால்

ஆசி பெற்றது;

அது வானத்தின் செல்வத்தாலும்

பனியாலும்,

14ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும்,

கதிரவன் வழங்கும் கனிகளாலும்,

பருவங்கள் விளைவிக்கும்

பயன்களாலும்

15பண்டைய மலைகளின் உயர்

செல்வங்களாலும், என்றுமுள

குன்றுகளின் அரும் பொருள்களாலும்

ஆசிபெற்றது.

16நிலம் தரும் பெரும் விளைச்சலும்

அதன் நிறைவும், முட்புதரில்

வீற்றிருந்தவரின் அருளன்பும்,

எல்லா ஆசிகளும் யோசேப்பின்

தலைமீதும் தன் சகோதரருள்

தேர்ந்தெடுக்கப்பட்டவனின்

உச்சந்தலைமீதும் தங்குவதாக!

17அவனது நடை தலையீற்றுக்

காளையின் பீடுநடை போன்றது.

அவனின் கொம்புகள்

காட்டெருமையின் கொம்புகள்

போன்றவை;

அவற்றால் மக்களினத்தாரைப்

பூவுலகின் கடை எல்லைவரை

முட்டித் துரத்துவான்.

அவை எப்ராயிமின் பதினாயிரம்

படைகளும் மனாசேயின் ஆயிரம்

படைகளும் ஆகும்.

18செபுலோனைக் குறித்து அவர்

கூறியது:

செபுலோனே, நீ பயணம்

செய்கையில் மகிழ்ந்திடு!

இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும்

போது மகிழ்ந்திடு!

19அவர்கள் மக்களினங்களை

மலைக்கு அழைத்துச் செல்வர்;

அங்கு அவர்கள் ஏற்புடைய

பலிகளைச் செலுத்துவர்;

அவர்கள் கடலில் பலுகியிருப்பதும்

மணலில் புதைந்திருப்பதுமான

திரளான செல்வங்களை அனுபவிப்பார்.

20காத்தைக் குறித்து அவர் கூறியது:

காத்தைப் பெருகச் செய்பவர்

போற்றி! போற்றி!

காத்து சிங்கத்தைப்போல்

தங்கியிருந்து புயத்தையும்

தலையையும் பீறிப் பிளந்திடுவான்.

21அவன் தனக்கெனச் சிறந்த

இடத்தைத் தேர்ந்து கொண்டான்;

தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக

ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின்

தலைவனாகி, அவன் ஆண்டவரின்

நீதியை நிலை நிறுத்தினான்;

ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து,

அவர்தம் நீதிமுறையை

நிலைநாட்டினான்.

22தாணைக் குறித்து அவர் கூறியது:

தாண் பாசானினின்று

பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.

23நப்தலியைக் குறித்து அவர் கூறியது:

ஆண்டவரின் அருளன்பால்

நிறைவு பெற்றவன்;

கலிலேயக் கடலையும்

தென்திசையையும்

உடைமையாக்கிக் கொள்வான்.

24ஆசேரைக் குறித்து அவர் கூறியது:

ஆசேர் எல்லாக் குலங்களிடையே

ஆசி பெற்றவனாவான்;

தன் உடன்பிறந்தாருக்கு

உகந்தவனாய் இருப்பான்;

அவன் தன் காலை எண்ணெயில்

தோய்ப்பான்.

25உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும்

செம்பாலும் ஆனவை;

உன் வாழ்நாள் அனைத்தும் நீ

பாதுகாப்புடன் இருப்பாய்.

26எசுரூபின் இறைவன்போல்

எவருமில்லை; அவர் உனக்கு

உதவிட வானங்களின் வழியாக

தமது மாட்சியுடன் மேகங்கள்மீது

ஏறிவருவார்.

27என்றுமுள கடவுளே உனக்குப்

புகலிடம்; என்றுமுள அவரது

புயம் உனக்கு அடித்தளம்;

‘பகைவரை உன் முன்னின்று

விரட்டியடித்து, அவர்களை

அழித்துவிடு’ என்பார் அவர்.

28அப்போது, இஸ்ரயேல்

பாதுகாப்புடன் வாழ்ந்திடும்;

யாக்கோபின் உறைவிடம் தானியமும்,

இரசமும் மிகுந்த நிலத்தில்

இருக்கும்; அவர்தம் மேகங்கள்

பனி மழை பொழியும்.

29இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;

ஆண்டவரால் மீட்கப்பட்ட

மக்களினமே! உன்னைப்போல்

வேறு இனம் உண்டோ?

உன்னைக் காக்கும் கேடயமும் உன்

வெற்றி வாளும் அவரே!

உன் பகைவர் உன்முன் கூனிக்

குறுகுவர்! அவர்களின்

தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.


33:8 விப 17:7; 28:30; எண் 20:13.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks