Home » 2 திமொத்தேயு அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 திமொத்தேயு அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 திமொத்தேயு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கிறிஸ்துவின் நல்லதொரு படைவீரன்

1என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.

2சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.

3கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்.

4படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!

5விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும்.

6நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளரே விளைச்சலில் முதல் பங்கு பெற வேண்டும்.

7நான் கூறுபவற்றைக் கருத்தில் கொள். ஆண்டவர் உனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறமையைத் தருவாராக.

8தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள்.

9இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.

10தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.

11பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது:

‘நாம் அவரோடு இறந்தால்,

அவரோடு வாழ்வோம்;

12அவரோடு நிலைத்திருந்தால்,

அவரோடு ஆட்சிசெய்வோம்;

நாம் அவரை மறுதலித்தால்

அவர் நம்மை மறுதலிப்பார்.

13நாம் நம்பத்தகாதவரெனினும்

அவர் நம்பத்தகுந்தவர்.

ஏனெனில் தம்மையே மறுதலிக்க

அவரால் இயலாது.’

இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.

3. தவறான போதனை குறித்து அறிவுரை

கடவுளுக்கு ஏற்புடைய பணியாளர்

14வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு.

15நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.

16உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு; ஏனெனில், அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள்.

17அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.

18உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்; சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.

19கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் ‘ஆண்டவர் தம்முடையோரை அறிவார்’ என்றும், ‘ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

20ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை; சில மதிப்பற்றவை.

21ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்; தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.

22எனவே, நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.

23மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு.

24ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்; அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும்,

25மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம்.

26அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.


2:12 மத் 10:33; லூக் 12:9.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks