back to top
HomeTamilஇனிமைமிகு பாடல் அதிகாரம் - 5 - திருவிவிலியம்

இனிமைமிகு பாடல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

இனிமைமிகு பாடல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1என் தோட்டத்திற்கு நான்

வந்துள்ளேன்;

என் தங்காய், மணமகளே,

என் வெள்ளைப்போளத்தையும்

நறுமணப் பொருளையும்

சேகரிக்கின்றேன்;

என் தேனையும் தேனடைகளையும்

உண்கின்றேன்;

என் திராட்சை இரசத்தையும்

பாலையும் பருகுகின்றேன்;

தோழர்களே, உண்ணுங்கள்;

அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.

பாடல் 17: தலைவி கூற்று

2நான் உறங்கினேன்;

என் நெஞ்சமோ விழித்திருந்தது;

இதோ, என் காதலர்

கதவைத் தட்டுகின்றார்;

“கதவைத் திற, என் தங்காய்,

என் அன்பே, என் வெண்புறாவே,

நிறை அழகே,

என் தலை பனியால் நனைந்துள்ளது;

என் தலைமயிர்ச் சுருள்

இரவுத் தூறலால் ஈரமானது.

3“என் ஆடையைக் களைந்து விட்டேன்;

மீண்டும் அதனை நான்

உடுத்த வேண்டுமோ?

என் கால்களைக் கழுவியுள்ளேன்;

மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”

4என் காதலர் கதவுத் துளை வழியாகக்

கையைவிட்டார்;

என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.

5எழுந்தேன் நான்,

காதலர்க்குக் கதவு திறக்க;

என் கையில்

வெள்ளைப்போளம் வடிந்தது;

என் விரல்களில்

வெள்ளைப்போளம் சிந்திற்று;

தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.

6கதவைத் திறந்தேன் நான்

என் காதலர்க்கு;

அந்தோ! என் காதலர் காணவில்லை,

போய்விட்டார்; என் நெஞ்சம்

அவர் குரலைத் தொடர்ந்து போனது;

அவரைத் தேடினேன்;

அவரைக் கண்டேன் அல்லேன்;

அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!

7ஆனால் என்னைக் கண்டனர்

சாமக் காவலர்;

அவர்கள் என்னை அடித்தனர்;

காயப்படுதினர்;

என் மேலாடையைப்

பறித்துக் கொண்டனர்;

கோட்டைச் சுவரின்

காவலர்கள் அவர்கள்!

8எருசலேம் மங்கையரே,

ஆணையிட்டுச் சொல்கிறேன்;

என் காதலரைக் காண்பீர்களாயின்

அவரிடம் என்ன சொல்வீர்கள்?

“காதல் நோயுற்றேன் நான்”

எனச் சொல்லுங்கள்.

9“பெண்களுக்குள் பேரழகியே,

மற்றக் காதலரினும் உன் காதலர்

எவ்வகையில் சிறந்தவர்?

இவ்வாறு எங்களிடம்

ஆணையிட்டுக் கூறுகின்றாயே;

மற்றக் காதலரினும் உன்காதலர்

எவ்வகையில் சிறந்தவர்?”

10“என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;

பல்லாயிரம் பேர்களிலும்

தனித்துத் தோன்றுவார்!

11அவரது தலை பசும்பொன்;

தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;

காகம்போல் கருமை மிக்கது.

12அவர் கண்கள்

வெண்புறாக்கள் போன்றவை;

பாலில் குளித்து,

நீரோடைகளின் அருகில்

கரையோரங்களில் தங்கும்

வெண்புறாக்கள் அவை.

13அவர் கன்னங்கள் நறுமண

நாற்றங்கால்கள் போல்வன;

நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;

அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;

அவற்றினின்று வெள்ளைப்போளம்

சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.

14அவருடைய கைகள்

உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்

மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;

அவரது வயிறு

யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;

அதில் நீலமணிகள்

பொதியப் பெற்றுள்ளன.

15அவருடைய கால்கள்

பளிங்குத் தூண்கள்;

தங்கத் தளத்திலே

அவை பொருந்தியுள்ளன;

அவரது தோற்றம்

லெபனோனுக்கு இணையானது;

கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.

16அவரது வாய் இணையற்ற இனிமை;

அவர் முழுமையும் பேருவகையே;

எருசலேம் மங்கைய

இவரே என் நண்பர்.”

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks