சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பொது அறிவு
1வலியவரோடு வழக்காடாதே;
அவர்கள் கையில்
சிக்கிக்கொள்ள நேரிடும்.
2செல்வருடன் சண்டையிடாதே;
உன்னைவிட அவர்கள்
வசதிமிக்கவர்கள்.
பொன்னாசை பலரை
அழித்திருக்கிறது;
மன்னர்களின் மனத்தையும்
கெடுத்திருக்கிறது.
3வாயாடிகளோடு வாதிடாதே;
எரியும் நெருப்பில்
எண்ணெய் வார்க்காதே.
4பண்பற்றோரிடம் நகையாடாதே;
உன் முன்னோரை
அவர்கள் பழித்துரைக்கலாம்.
5பாவத்தினின்று
மனந்திரும்புவோரைப் பழிக்காதே;
நாம் எல்லாருமே தண்டனைக்கு
உரியவர்கள் என்பதை
நினைத்துக் கொள்.
6முதியோர் எவரையும் இகழாதே;
நம்முள் சிலரும் முதுமை
அடைந்து வருகிறோம்.
7இறந்தோரைக் கண்டு மகிழாதே;
நாம் எல்லாருமே சாக வேண்டும்
என்பதை நினைவில் கொள்.
8ஞானிகளுடைய அறிவுரைகளைப்
புறக்கணியாதே;
அவர்களுடைய
பொன்மொழிகளைக் கற்றுணர்.
அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்;
பெரியார்களுக்குப் பணி செய்யக்
கற்றுக்கொள்வாய்.
9முதியோரின் உரைகளைப்
புறக்கணியாதே;
அவர்களும் தங்கள்
முன்னோரிடமிருந்தே
கற்றுக்கொண்டார்கள்;
அவர்களிடமிருந்து நீயும்
அறிவுக் கூர்மை பெறுவாய்;
தகுந்த நேரத்தில் தக்க
விடை கூற அறிந்துகொள்வாய்.
10பாவிகளது தீய நாட்டத்தைத்
தூண்டிவிடாதே;
அது உன்னைப் பொசுக்கிவிடும்.
11இறுமாப்புக் கொண்டோருடன்
மோதாதே; மோதினால்,
உன் சொற்களைக் கொண்டே
உன்மீது குற்றம் சாட்டுவர்.
12உன்னிலும் வலியோருக்குக்
கடன்கொடாதே;
கொடுத்தால்,
அதை இழந்து
விட்டதாக எண்ணிக்கொள்.
13உன் உடைமைக்கு மிஞ்சிப்
பிணையம் ஆகாதே;
பிணையமானால், பணம் செலுத்த
ஆயத்தமாய் இரு.
14நடுவருக்கே எதிராக
வழக்குத் தொடுக்காதே;
அவரது பெருமையை முன்னிட்டு
அவர் சார்பாகவே தீர்ப்பு
வழங்கப்படும்.
15தறுதலைகளோடு பயணம் செய்யாதே;
அவர்கள் உனக்குச்
சுமையாய் இருப்பார்கள்;
தங்களது விருப்பம் போல
நடப்பார்கள்;
அவர்களது அறிவின்மையால்
நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.
16முன்கோபிகளுடன் சண்டையிடாதே;
அவர்களுடன் ஆளில்லாத்
தனியிடத்திற்குச் செல்லாதே.
கொலை செய்யவும்
அவர்கள் அஞ்சுவதில்லை;
உனக்கு உதவி இல்லாத
இடத்தில் உன்னைத்
தாக்கி வீழ்த்துவார்கள்.
17அறிவிலிகளோடு கலந்தாராயாதே;
அவர்களால் இரகசியங்களைக்
காப்பாற்ற முடியாது.
18மறைக்க வேண்டியவற்றை
அன்னியர் முன் செய்யாதே;
அவர்கள் எதை வெளியிடுவார்கள்
என உனக்குத் தெரியாது.
19திறந்த உள்ளத்துடன்
எல்லாரிடமும் பேசாதே;
அவர்கள் உனக்கு நன்றி
உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.