சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
யோசியா
1யோசியாவின் நினைவு,
நறுமணப் பொருள்
தயாரிப்பவரால் செய்யப்பட்ட
தூபக் கலவைபோன்றது;
எல்லாருடைய வாயிலும்
தேனைப்போலும், திராட்சை
இரசம் பரிமாறப்படும் விருந்தின்
இன்னிசைபோலும் இனியது.
2மக்களைச் சீர்படுத்துவதில்
நேர்மையாக நடந்துகொண்டார்;
தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.
3ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச்
செலுத்தினார்; தீநெறியாளர்களின்
காலத்தில் வாழ்ந்த இறைப்
பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.
எரேமியா
4தாவீது, எசேக்கியா, யோசியா,
ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும்
பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.
ஏனெனில் உன்னத இறைவனின்
திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;
யூதாவின் மன்னர்களும்
மறைந்துபோயினர்.
5அவர்கள் தங்களுடைய வலிமையைப்
பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;
தங்களுடைய மாட்சியை அயல்
நாட்டாருக்குக் கையளித்தார்கள்.
6திருவிடம் அமைந்திருந்த
தெரிந்தெடுக்கப்பட்ட நகரை
அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;
எரேமியா கூறியபடி அதன்
தெருக்களைப் பாழாக்கினார்கள்.
7தாயின் வயிற்றிலேயே
இறைவாக்கினராகத்
திருநிலைப்படுத்தப்பெற்று,
பிடுங்கவும் துன்புறுத்தவும்
இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும்
நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்
பெற்ற எரேமியாவை அவர்கள்
கொடுமையாய் நடத்தினார்கள்.
எசேக்கியேல்
8எசேக்கியேல் கடவுளுடைய
மாட்சியின் காட்சியைக் கண்டார்;
கெருபுகள் தாங்கின தேரின்மேல்
மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர்
அவருக்குக் காட்டினார்.
9பகைவர்களை நினைவுகூர்ந்து
புயலை அனுப்பினார்;
நேரிய வழியில் நடந்தோருக்கு
நலன்கள் புரிந்தார்.
பன்னிரண்டு இறைவாக்கினர்
10பன்னிரண்டு இறைவாக்கினர்களின்
எலும்புகள் அவர்களது
கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.
அவர்கள் யாக்கோபின்
குலத்தாரைத் தேற்றினார்கள்;
பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால்
அவர்களை விடுவித்தார்கள்.
செருபாபேல், யோசுவா
11செருபாபேலை எவ்வாறு நாம்
மேன்மைப்படுத்துவோம்?
வலக்கையின் கணையாழிபோல்
அவர் திகழ்ந்தார்.
12அவரைப்போலவே யோசதாக்கின்
மகன் யோசுவாவும் விளங்கினார்.
அவர்கள் தங்கள் காலத்தில்
ஆண்டவரின் இல்லத்தைக்
கட்டினார்கள்; என்றுமுள
மாட்சிக்கென
நிறுவப்பட்ட திருக்கோவிலை
ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.
நெகேமியா
13நெகேமியாவின் நினைவும்
பெருமைக்குரியது.
இடிந்து விழுந்த மதில்களை
அவர் நமக்காக எழுப்பினார்;
கதவுகளையும் தாழ்ப்பாள்களையும்
பொருத்தினார்; நம் இல்லங்களை
மீண்டும் கட்டினார்.
குலமுதல்வர்கள்
14ஏனோக்குபோன்ற எவரும்
மண்ணுலகின்மீது
படைக்கப்படவில்லை. அவர்
நிலத்திலிருந்து மேலே
எடுத்துக் கொள்ளப்பெற்றார்.
15யோசேப்பைப் போன்றவர்
எவரும் பிறந்ததில்லை;
அவர் சகோதரர்களின்
தலைவராகவும் மக்களின்
ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.
அவருடைய எலும்புகளும்
காக்கப்பட்டன.
16சேம், சேத்து ஆகியோர்
மனிதருக்குள்
மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.
படைக்கப்பட்ட
எல்லா உயிரினங்களுள்ளும்
ஆதாம் சிறந்து விளங்குகிறார்.