back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 28 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 28 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1பழிவாங்குவோர்

ஆண்டவரிடமிருந்து

பழிக்குப்பழியே பெறுவர்.

ஆண்டவர் அவர்களுடைய

பாவங்களைத் திண்ணமாய்

நினைவில் வைத்திருப்பார்.

2உனக்கு அடுத்திருப்பவர்

செய்த அநீதியை

மன்னித்துவிடு;

அவ்வாறெனில் நீ

மன்றாடும் போது உன்

பாவங்கள் மன்னிக்கப்படும்.

3மனிதர் மனிதர்மீது

சினங்கொள்கின்றனர்;

அவ்வாறிருக்க, ஆண்டவர்

தங்களுக்கு நலம் அளிப்பார்

என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

4மனிதர் தம்போன்ற மனிதருக்கு

இரக்கங்காட்டுவதில்லை;

அப்போது அவர்கள்

தம் பாவமன்னிப்புக்காக

எப்படி மன்றாடமுடியும்?

5அழியும் தன்மை கொண்ட

மனிதர் வெகுளியை

வளர்க்கின்றனர்.

அவ்வாறாயின், யார்

அவர்களுடைய பாவங்களுக்குக்

கழுவாய் தேட முடியும்?

6உன் முடிவை நினைத்துப்பார்;

பகைமையை அகற்று;

அழிவையும் சாவையையும்

நினைத்துப்பார்;

கட்டளைகளில் நிலைத்திரு.

7கட்டளைகளை நினைவில் கொள்;

அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே;

உன்னத இறைவனின்

உடன்படிக்கையைக் கருத்தில் வை;

குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

பூசல்

8பூசலைத் தவிர்த்திடு;

உன் பாவங்கள் குறையும்.

சீற்றங்கொள்வோர் சண்டையை

மூட்டிவிடுகின்றனர்.

9பாவிகள் நட்பைக்

கலைக்கிறார்கள்;

அமைதியாய் இருப்போரிடையே

பிணக்கை விதைக்கிறார்கள்.

10விறகின் தன்மைக்கு

ஏற்ப நெருப்பு பற்றியெரியும்;

பூசலின் கடுமைக்கு

ஏற்ப அது பற்றியெரியும்.

மனிதரின் வலிமையைப் பொறுத்து

அவர்களின் சீற்றம் அமையும்;

அவர்களின் செல்வத்தைப் பொறுத்து

அவர்களது சினம் பெருகும்.

11திடீர் வாக்குவாதம்

நெருப்பை மூட்டுகிறது;

திடீர்ப் பூசல் கொலைக்கு

இட்டுச் செல்கிறது.

12ஊதும்போது தீப்பொறி

கொழுந்துவிட்டு எரிகிறது;

அதன்மீது துப்பும்போது

அது அணைந்துபோகிறது;

இந்த இரு விளைவுகளும்

உன் வாயினின்றே புறப்படுகின்றன.

புறங் கூறுதல்

13புறங்கூறுவோரையும்

இரட்டை நாக்குக்

கொண்டோரையும் சபி.

அமைதியில் வாழ்ந்த பலரை

அவர்கள் அழித்துவிட்டார்கள்.

14மூன்றாவது நாக்கு*

பலரை நிலைகுலையச் செய்தது;

அவர்களை நாடுவிட்டு நாடு

துரத்தியடித்தது;

அரண் கொண்ட நகர்களைத்

தகர்த்தெறிந்தது;

பெரியோர்களின்

வீடுகளைத் தரைமட்டமாக்கியது.

15மூன்றாவது நாக்கு

பற்றுள்ள மனைவியரையும்

வெளியில் துரத்தியது;

அவர்களுடைய உழைப்பின்

பயனை இழக்கச் செய்தது.

16அதற்குச் செவிசாய்ப்பவர்கள்

ஓய்வு கொள்ளமாட்டார்கள்;

அமைதியிலும் வாழமாட்டார்கள்.

17சவுக்கடி தழும்பை உண்டாக்கும்;

வாயடியோ எலும்பை முறிக்கும்.

18பலர் வாள்முனையில்

மடிந்திருக்கின்றனர்;

நாவால் மடிந்தோரே

அவர்களை விட மிகுதியானோர்.

19மூன்றாவது நாக்கினின்று

பாதுகாக்கப்பட்டோர்

பேறுபெற்றோர்;

அதன் சீற்றத்துக்கு

ஆளாகாதோறும்

அதன் நுகத்தைச்

சுமக்காதோறும்

அதன் சங்கிலிகளால்

கட்டப்படாதோரும்

பேறுபெற்றோர்.

20அதன் நுகம் இரும்பு நுகம்;

அதன் சங்கிலிகள்

வெண்கலச் சங்கிலிகள்.

21அதனால் விளையும்

சாவு இழிந்த சாவு;

அதனைவிடப் பாதாளம்

மேலானது.

22இறைப்பற்றுள்ளோர்மீது

அதற்கு ஆற்றலில்லை;

அதன் தீப்பிழம்புகள்

அவர்களை எரிப்பதில்லை.

23ஆண்டவரைவிட்டு விலகுவோர்

அதற்குள் விழுகின்றனர்;

அவர்களுக்குள் அது

கொழுந்துவிட்டு எரியும்;

அதை அணைக்க முடியாது.

அது சிங்கத்தைப்போன்று

அவர்கள் மீது கட்டவீழ்த்து

விடப்படும்;

வேங்கையைப்போன்று

அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.

24உன் உடைமைகளைச்

சுற்றி முள் வேலியிடு;

உன் வெள்ளியையும்

பொன்னையையும் பூட்டிவை.

25உன் சொற்களை நிறுத்துப்

பார்க்கத் துலாக் கோலையும்

எடைக்கற்களையும் செய்துகொள்;

உன் வாய்க்குக் கதவு

ஒன்று செய்து அதைத் தாழிடு.

26நாவால் தவறாதபடி

எச்சரிக்கையாய் இரு;

இல்லையேல்,

உனக்காய்ப் பதுங்கியிருப்போர்

முன் நீ வீழ்ச்சியுறுவாய்.


28:2 மத் 6:14; மாற் 11:25.
28:9 நீமொ 6:12, 14, 19.
28:12 1 யாக் 3:10.
28:13-26 யாக் 3:5-12.


28:14 மூன்றாவது நாக்கு என்றால் ‘புறங்கூறுதல்’ ஆகும்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks