சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1வருவாயைப் பெருக்குவதற்காகப்
பலர் பாவம் புரிகின்றனர்;
செல்வத்திற்காக அலைவோர்
தங்கள் கண்களைத்
திருப்பிக் கொள்கின்றனர்.
2கற்களுக்கு இடையே உள்ள
துளையில் முளை அடிக்கப்படுகிறது;
விற்றல் வாங்கலுக்கு இடையே
பாவம் நுழைந்துகொள்கிறது.
3ஆண்டவரிடம் கொள்ளும்
அச்சத்தில் ஒருவன்
உறுதியாய் நிலைத்திராவிட்டால்
அவனது வீடு
விரைவில் நிலைகுலைந்துவிடும்.
பேச்சு
4சலிக்கின்றபோது சல்லடையில்
உமி தங்கிவிடுகின்றது;
அவ்வாறே, மனிதரின் பேச்சில்
மாசுபடிந்துவிடுகின்றது.
5குயவரின் கலன்களை,
சூளை பரிசோதிக்கின்றது;
மனிதரை, உரையாடல்
பரிசோதிக்கின்றது.
6கனி, மரத்தின்
கண்காணிப்பைக்
காட்டுகின்றது;
சொல், மனிதரின்
உள்ளப் பண்பாட்டைக்
காட்டுகின்றது.
7ஒருவர் பேசுவதற்குமுன்பே
அவரைப் புகழாதே;
பேச்சைக் கொண்டே
அவரை அறிந்து கொள்ளலாம்.
8நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால்
அதனை அடைந்து கொள்வாய்;
மாட்சிமிகு நீண்ட ஆடையாக
அதனை அணிந்துகொள்வாய்.
9பறவைகள் தம்முடைய
இனத்தோடு தங்குகின்றன;
உண்மை அதனைக்
கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்.
10இரைக்காகப் பதுங்கிச்
சிங்கம் காத்திருக்கின்றது;
தீமை செய்கிறவர்களுக்காகப்
பாவம் காத்திருக்கின்றது.
11இறைப்பற்றுள்ளோரின் பேச்சு
எப்போதும் ஞானமுள்ளது;
அறிவிலிகள் நிலவுபோல மாறுபடுவர்.
12அறிவிலிகள் நடுவில்
காலத்தை வீணாக்காதே;
அறிவாளிகள் நடுவில்
நிலைத்து நில்.
13மூடரின் உரை
வெறுக்கத்தக்கது;
அவர்களின் சிரிப்பு
பாவத்தைத் தூண்டவல்லது.
14அடிக்கடி ஆணையிடுவோரின்
பேச்சு மெய்சிலிர்க்கச்
செய்கின்றது;
அவர்களின் வாய்ச் சண்டை
நம் காதுகளை மூடச் செய்கின்றது.
15செருக்குற்றோரின் வாய்ச்
சண்டை கொலைக்கு
இட்டுச் செல்லும்;
அவர்களின் வசைமொழி
கேட்பது வருத்தத்திற்கு உரியது.
இரகசியங்களை வெளிப்படுத்துதல்
16இரகசியங்களை
வெளிப்படுத்துவோர் பிறருடைய
நம்பிக்கையை இழக்கின்றனர்;
ஆருயிர் நண்பர்களை
அவர்கள் அடையமாட்டார்கள்.
17நண்பருக்கு அன்புகாட்டு;
அவர்கள்மீது நம்பிக்கை வை;
அவர்களுடைய இரகசியங்களை
நீ வெளிப்படுத்திவிட்டால்
அவர்கள் பின் செல்லாதே.
18ஏனெனில் ஒருவர்
இன்னொருவரைக் கொலை
செய்வதைப்போன்று
நீ அடுத்திருப்பவரின்
நட்பைக் கொன்றுவிட்டாய்.
19உன் கையில் இருந்த
பறவையை நழுவவிட்டது
போல் அடுத்திருப்பவரைப்
போகவிட்டு விட்டாய்;
இனி நீ அவரைப் பிடிக்கமாட்டாய்.
20அவரைத் தொடர்ந்து செல்லாதே;
ஏனெனில் அவர் தொலைவில்
சென்றுவிட்டார்;
கண்ணியினின்று தப்பியோடும்
மான்போல் ஓடிவிட்டார்.
21காயத்துக்குக் கட்டுப்போடலாம்;
வசைமொழியை மன்னிக்கலாம்;
ஆனால் இரகசியங்களை
வெளிப்படுத்துவோர்
பிறருடைய நம்பிக்கையை
இழக்கின்றனர்.
வெளிவேடம்
22கண்ணால் சாடை
காட்டுபவர்கள் தீச்செயலுக்குச்
சூழ்ச்சி செய்கின்றார்கள்.
அதிலிருந்து யாரும்
அவர்களைத் தடுக்கமுடியாது.
23உன் கண்முன் அவர்கள்
தேன் ஒழுகப் பேசுவார்கள்;
உன் பேச்சைக் கேட்டு
வியப்படைவார்கள்;
பின்னால் அவர்களது
பேச்சு மாறிவிடும்;
உன் சொல்லைக் கொண்டே
உன்னை இடறிவிழச் செய்வார்கள்.
24பலவற்றை நான்
வெறுத்திருக்கிறேன்;
ஆனால் இவர்களை
வெறுத்ததுபோல்
வேறு எதனையும்
வெறுத்ததில்லை.
ஆண்டவரும் இவர்களை
வெறுக்கின்றார்.
25கல்லை மேலே எறிவோர்
அதைத் தம் தலை
மேலேயே எறிந்து கொள்கின்றனர்;
நம்பிக்கைக் கேடு எனும்
அடி காயங்களைப் புதுப்பிக்கும்.
26குழி தோண்டுவோர்
அதிலேயே விழுவர்;
கண்ணி வைப்போர்
அதிலேயே பிடிபடுவர்.
27தீமை செய்வோரைத்
தீமை திருப்பித் தாக்கும்;
அது எங்கிருந்து வருகிறது
என அவர்களுக்கே தெரியாது.
28ஏளனமும் பழிச்சொல்லும்
செருக்குற்றோருக்கு உரியவை;
பழிக்குப்பழி அவர்களுக்காகச்
சிங்கத்தைப்போல்
பதுங்கிக் காத்திருக்கிறது.
29இறைப்பற்றுள்ளோரின்
வீழ்ச்சியில் மகிழ்வோர்
கண்ணியின் பிடியில் சிக்குவர்;
அவர்கள் இறக்குமுன்
துயரமே. அவர்களைக் கொன்றுவிடும்.
சீற்றம்
30வெகுளி, சினம் ஆகிய
இரண்டும் வெறுப்புக்குரியவை;
பாவிகள் இவற்றைப் பற்றிக்
கொள்கின்றார்கள்.