back to top
HomeTamilஉரோமையர் அதிகாரம் - 11 - திருவிவிலியம்

உரோமையர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்

உரோமையர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இஸ்ரயேலருள் எஞ்சினோர்

1அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை. நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன், பென்யமின் குலத்தினன்.

2தாம் முன்பே தேர்ந்து கொண்ட மக்களைக் கடவுள் தள்ளி விடவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா?

3“ஆண்டவரே,

உம் இறைவாக்கினரை

வாளால் கொன்றுவிட்டனர்;

உம் பலிபீடங்களைத் தகர்த்துவிட்டனர்;

நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க,

என் உயிரையும்

பறிக்கத் தேடுகின்றனர்”

என்றார்.

4ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன?

“பாகாலுக்கு மண்டியிடாதவர்களாகிய

ஏழாயிரம் பேரை மட்டும்

எனக்கென்று

விட்டு வைத்துள்ளேன்”

என்பதாம்.

5அதுபோல் இக்காலத்திலும் சிலர் எஞ்சியிருக்கின்றனர். இவர்கள் இறையருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

6இவர்கள் அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பொருள். இல்லையேல் அருள் என்பதற்குப் பொருளே இல்லை.

7அப்படியானால் என்ன? தாங்கள் தேடியதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அடைந்து கொள்ளவில்லை. அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சிலரே அடைந்தனர்; எஞ்சியோர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.

8“ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை

ஆண்டவர் உங்கள் மீது

அனுப்பியுள்ளார்;

காண்கின்ற கண்களையும்

கேட்கின்ற செவிகளையும்

இந்நாள்வரை ஆண்டவர்

உங்களுக்குத் தரவில்லை”

என்று மறைநூலில் எழுதியுள்ளது.

9“அவர்களுடைய விருந்துகள்

அவர்களுக்குக் கண்ணியாகவும்

பொறியாகவும் தடைக்கல்லாகவும்

தண்டனையாகவும் ஆகட்டும்.

10அவர்களின் கண்கள்

காணாதவாறு ஒளி இழக்கட்டும்;

அவர்களின் முதுகு

கூன்விழுந்தே இருக்கட்டும்”

என்று தாவீதும் கூறுகின்றார்.

பிற இனத்தாரின் மீட்பு

11அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது. அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று.

12அவர்கள் தவறியதால் உலகம் அருள்வளமுற்றது; அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?

13பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்.

14இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன்.

15யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?

16பிசைந்த மாவில் முதலில் ஒருபிடி எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணித்தால் அம்மாவு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டதாகிறது. அவ்வாறே மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டால் அதன் கிளைகளும் அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.

17நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு, அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால், அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது.

18அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத் தன்னைப் பெருமையாகக் கருதலாமா? அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே. அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும், நீங்கள் வேரைத் தாங்கவில்லை; வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்.

19“நாங்கள் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன” என நீங்கள் சொல்லலாம்.

20சரிதான்; அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்; நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால், உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே.

21ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா?

22இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்.

23யூதர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிராத நிலையிலிருந்து மாறினால், அவர்களும் ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.

24ஏனெனில், காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீங்கள் வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவமரத்தில் ஒட்டுப்போடப்பட்டீர்களானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுப்போடுவது எத்துணை எளிது.

இஸ்ரயேலர் இழந்த நிலையை மீண்டும் அடைதல்

25சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.

26-27பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்;

“சீயோனிலிருந்து அவர்

மீட்பராக வருவார்;

யாக்கோபில் தீயதனைத்தையும்

போக்கிடுவார்.

நான் அவர்களுடைய பாவங்களை

அகற்றிவிடுவேன்;

அவர்களுடன் நான் செய்து கொள்ளும்

உடன்படிக்கை இதுவே”

என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

28நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.

29ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.

30ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்.

31அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.

32ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

33கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!

34“ஏனெனில் ஆண்டவரின் மனத்தை

அறிபவர் யார்?

அவருக்கு அறிவுரையாளராய்

இருப்பவர் யார்?

35தமக்குக் கைம்மாறாக

ஏதாவது கிடைக்கும் என

முன்னதாகவே அவரிடம்

கொடுத்து வைத்தவர் யார்?”

36அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


11:1 திபா 94:14; பிலி 3:5.
11:3 1 அர 19:10,14.
11:4 1 அர 19:18.
11:8 இச 29:4; எசா 29:10.
11:9-10 திபா 69:22,23.
11:21 எரே 49:12.
11:26 எசா 59:20.
11:27 எசா 27:9; எரே 31:33,34.
11:33 திபா 139:17,18; எசா 55:8.
11:34 எசா 40:13.
11:36 1 கொரி 8:6; 11:12.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks