back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 77 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 77 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

துன்ப நாளில் ஆறுதல்
(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; ஆசாபின் புகழ்ப்பா)

1கடவுளை நோக்கி

உரத்த குரலில் மன்றாடுகின்றேன்;

கடவுள் எனக்குச்

செவிசாய்த்தருள வேண்டுமென்று

அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.

2என் துன்ப நாளில்

என் தலைவரை நாடினேன்;

இரவில் அயராது கைகூப்பினேன்;

ஆனாலும் என் ஆன்மா

ஆறுதல் அடையவில்லை.

3கடவுளை நினைத்தேன்;

பெருமூச்சு விட்டேன்;

அவரைப்பற்றி சிந்தித்தேன்;

என் மனம் சோர்வுற்றது. (சேலா)

4என் கண் இமைகள்

மூடாதபடி செய்துவிட்டீர்;

நான் கலக்கமுற்றிருக்கிறேன்;

என்னால் பேச இயலவில்லை.

5கடந்த நாள்களை

நினைத்துப் பார்க்கின்றேன்;

முற்கால ஆண்டுகளைப்பற்றிச்

சிந்திக்கின்றேன்.

6இரவில் என் பாடலைப்பற்றி

நினைத்துப் பார்த்தேன்;

என் இதயத்தில் சிந்தித்தேன்;

என் மனம் ஆய்வு செய்தது;

7‘என் தலைவர் என்றென்றும்

கைவிட்டுவிடுவாரோ?

இனி ஒருபோதும் ஆதரவளிக்க

மாட்டாரோ?

8அவரது பேரன்பு

முற்றிலும் மறைந்துவிடுமோ?

அவரது வாக்குறுதி தலைமுறைதோறும்

அற்றுப்போய்விடுமோ?

9கடவுள் இரக்கங்காட்ட

மறந்துவிட்டாரோ? அல்லது

சினங்கொண்டு தமது இரக்கத்தை

நிறுத்திவிட்டாரோ?’ (சேலா)

10அப்பொழுது நான்,

‘உன்னதரின் வலக்கை

மாறுபட்டுச் செயலாற்றுவது

என்னை வருத்துகின்றது’ என்றேன்.

11ஆண்டவரே, உம் செயல்களை

என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;

முற்காலத்தில் நீர் செய்த

வியத்தகு செயல்களை

நினைத்துப் பார்ப்பேன்.

12உம் செயல்கள் அனைத்தையும் பற்றித்

தியானிப்பேன்!

உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச்

சிந்திப்பேன்.

13கடவுளே, உமது வழி தூய்மையானது!

மாபெரும் நம் கடவுளுக்கு

நிகரான இறைவன் யார்!

14அரியன செய்யும்

இறைவன் நீர் ஒருவரே!

மக்களினங்களிடையே உமது ஆற்றலை

விளங்கச் செய்தவரும் நீரே;

15யாக்கோபு, யோசேப்பு

என்போரின் புதல்வரான

உம் மக்களை நீர் உமது புயத்தால்

மீட்டுக் கொண்டீர். (சேலா)

16கடவுளே,

வெள்ளம் உம்மைப் பார்த்தது;

வெள்ளம் உம்மைப் பார்த்து

நடுக்கமுற்றது;

ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.

17கார்முகில்கள் மழை பொழிந்தன;

மேகங்கள் இடிமுழங்கின;

உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.

18உமது இடிமுழக்கம்

கடும்புயலில் ஒலித்தது;

மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின;

மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.

19கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்;

வெள்ளத்திரளிடையே

உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;

ஆயினும் உம் அடிச்சுவடுகள்

எவருக்கும் புலப்படவில்லை.

20மோசே, ஆரோன்

ஆகியோரைக் கொண்டு

உம் மக்களை

மந்தையென அழைத்துச் சென்றீர்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks