திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மூன்றாம் பகுதி
(73-89)
கடவுளின் நீதிமுறை
(ஆசாபின் புகழ்ப்பா)
1உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்
கடவுள் எவ்வளவு நல்லவர்!
தூய உள்ளத்தினர்க்கு
ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!
2என் கால்கள்
சற்றே நிலைதடுமாறலாயின;
நான் அடிசறுக்கி விழப்போனேன்.
3ஆணவம் கொண்டோர்மேல்
நான் பொறாமை கொண்டேன்;
பொல்லாரின் வளமிகு வாழ்வை
நான் கண்டேன்.
4அவர்களுக்குச்
சாவின் வேதனை என்பதே இல்லை;
அவர்களது உடல்,
நலமும் உரமும் கொண்டது.
5மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்
அவர்களுக்கு இல்லை.
மற்ற மனிதர்களைப் போல்
அவர்கள் துன்புறுவதில்லை.
6எனவே, மணிமாலைபோல்
செருக்கு அவர்களை அணி செய்கிறது;
வன்செயல் அவர்களை
ஆடைபோல மூடிக்கொள்கிறது.
7அவர்களின் கண்கள்
கொழுப்பு மிகுதியால்
புடைத்திருக்கின்றன;
அவர்களது மனத்தின் கற்பனைகள்
எல்லை கடந்து செல்கின்றன.
8பிறரை எள்ளி நகையாடி
வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;
இறுமாப்புக்கொண்டு
கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.
9விண்ணுலகை எதிர்த்து
அவர்கள் வாய் பேசுகின்றது;
மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்
விரிந்து பரவுகின்றது.
10ஆதலால், கடவுளின் மக்களும்
அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;
இவ்வாறு, கடல் முழுவதையும்
உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.
11‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?
உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’
என்கின்றார்கள்.
12ஆம்; பொல்லார்
இப்படித்தான் இருக்கின்றனர்;
என்றும் வளமுடன் வாழ்ந்து
செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
13அப்படியானால், நான் என் உள்ளத்தை
மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?
குற்றமற்ற நான் என் கைகளைக்
கழுவிக்கொண்டதும் வீண்தானா?
14நாள்தோறும் நான்
வதைக்கப்படுகின்றேன்;
காலைதோறும்
கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.
15“நானும் அவர்களைப்போல் பேசலாமே”
என்று நான் நினைத்திருந்தால்,
உம் மக்களின் தலைமுறைக்கு
நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.
16ஆகவே, இதன் உண்மை என்னவென்று
கண்டறிய முயன்றேன்;
ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.
17நான் இறைவனின் தூயகத்திற்குச்
சென்றபின்புதான்
அவர்களுக்கு நேரிடப்போவது என்ன
என்பதை உணர்ந்துகொண்டேன்.
18உண்மையில் அவர்களை நீர்
சறுக்கலான இடங்களில் வைப்பீர்;
அவர்களை விழத்தாட்டி
அழிவுக்கு உள்ளாக்குவீர்.
19அவர்கள் எவ்வளவு விரைவில்
ஒழிந்து போகிறார்கள்!
அவர்கள் திகில் பிடித்தவர்களாய்
அடியோடு அழிந்து போகிறார்கள்!
20விழித்தெழுவோரின் கனவுபோல்
அவர்கள் ஒழிந்து போவார்கள்;
என் தலைவராகிய ஆண்டவரே,
நீர் கிளர்ந்தெழும்போது
அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.
21என் உள்ளம் கசந்தது;
என் உணர்ச்சிகள் என்னை
ஊடுருவிக் குத்தின.
22அப்பொழுது நான்
அறிவிழந்த மதிகேடனானேன்;
உமது முன்னிலையில்
ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.
23ஆனாலும், நான் எப்போதும்
உமது முன்னிலையிலேதான்
இருக்கின்றேன்; என் வலக்கையை
ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.
24உமது திருவுளப்படியே
என்னை நடத்துகின்றீர்;
முடிவில் மாட்சியோடு
என்னை எடுத்துக் கொள்வீர்.
25விண்ணுலகில் உம்மையன்றி
எனக்கிருப்பவர் யார்?
மண்ணுலகில் வேறு விருப்பம்
உம்மையன்றி எனக்கேதுமில்லை.
26எனது உடலும் உள்ளமும்
நைந்து போயின;
கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்
என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.
27உண்மையிலேயே, உமக்குத்
தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;
உம்மைக் கைவிடும்
அனைவரையும் அழித்துவிடும்.
28நானோ கடவுளின் அண்மையே
எனக்கு நலமெனக் கொள்வேன்;
என் தலைவராகிய ஆண்டவரை
என் அடைக்கலமாய்க்கொண்டு
அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.