திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
நீதி வழங்குமாறு வேண்டல்
(தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)
1என் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;
என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார்.
3என் கடவுளாகிய ஆண்டவரே,
நான் இவற்றைச் செய்திருந்தால் –
என் கை தவறிழைத்திருந்தால்,
4என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு
நான் தீங்கிழைத்திருந்தால்,
என் பகைவனைக் காரணமின்றிக்
காட்டிக்கொடுத்திருந்தால் –
5எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;
என்னைத் தரையில் தள்ளி
மிதித்து நசுக்கட்டும்;
என் பெருமையைப் புழுதியில்
புதைக்கட்டும். (சேலா)
6ஆண்டவரே, சினங்கொண்டு
எழுந்தருளும்;
என் பகைவரின் சீற்றத்தை
அடக்க வாரும்;
எனக்காக விழித்தெழும்;
ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர்
நீர் ஒருவரே.
7எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி
உம்மைச் சூழச் செய்யும்;
அவர்கள்மீது உயரத்தினின்று
ஆட்சி செலுத்தும்.
8ஆண்டவரே, நீரே மக்களினத்தார்
அனைவருக்கும் நீதி வழங்குபவர்;
ஆண்டவரே, என் நேர்மைக்கும்
வாய்மைக்கும் ஏற்ப
எனக்குத் தீர்ப்பளியும்.
9பொல்லாரின் தீமையை
முடிவுக்குக் கொண்டுவாரும்;
நல்லாரை நிலைநிறுத்தும்;
நீர் எண்ணங்களையும்
விருப்பங்களையும் கண்டறிபவர்;
நீதி அருளும் கடவுள்.
10கடவுளே என் கேடயம்;
நேரிய உளத்தோரை
அவர் விடுவிப்பார்.
11கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;
நாள்தோறும் அநீதியைப்
பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,
அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;
வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;
அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
14ஏனெனில், பொல்லார்
கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;
அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,
பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15அவர்கள் குழியை வெட்டி
ஆழமாகத் தோண்டுகின்றனர்;
அவர்கள் வெட்டிய குழியில்
அவர்களே விழுகின்றனர்;
16அவர்கள் செய்த கேடு
அவர்கள் தலைக்கே திரும்பும்.
அவர்கள் செய்த கொடுமை
அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17ஆண்டவர் வழங்கிய நீதிக்காக
அவருக்கு நன்றி கூறுவேன்;
உன்னதரான ஆண்டவரின் பெயரைப்
போற்றிப் பாடுவேன்.