back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 69 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 69 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)

1கடவுளே! என்னைக் காப்பாற்றும்;

வெள்ளம் கழுத்தளவு

வந்துவிட்டது.

2ஆழமிகு நீர்த்திரளுள்

அமிழ்ந்திருக்கின்றேன்;

நிற்க இடமில்லை;

நிலைக்கொள்ளாத நீருக்குள்

ஆழ்ந்திருக்கின்றேன்;

வெள்ளம் என்மீது

புரண்டோடுகின்றது.

3கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;

தொண்டையும் வறண்டுபோயிற்று;

என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து

என் கண்கள் பூத்துப்போயின;

4காரணமில்லாமல் என்னை வெறுப்போர்

என் தலைமுடியைவிட

மிகுதியாய் இருக்கின்றனர்;

பொய்க்குற்றம் சாட்டி

என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.

நான் திருடாததை

எப்படித் திருப்பித் தரமுடியும்?

5கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;

என் குற்றங்கள் உமக்கு

மறைவானவை அல்ல.

6ஆண்டவரே! படைகளின் தலைவரே!

உமக்காகக் காத்திருப்போர்

என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;

இஸ்ரயேலின் கடவுளே!

உம்மை நாடித் தேடுகிறவர்கள்

என்பொருட்டு
மானக்கேடு அடையாதபடி செய்யும்.

7ஏனெனில், உம் பொருட்டே

நான் இழிவை ஏற்றேன்;

வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.

8என் சகோதரருக்கு

வேற்று மனிதனானேன்;

என் தாயின் பிள்ளைகளுக்கு

அயலான் ஆனேன்.

9உமது இல்லத்தின்மீது

எனக்குண்டான ஆர்வம்

என்னை எரித்துவிட்டது;

உம்மைப் பழித்துப் பேசினவர்களின்

பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.

10நோன்பிருந்து நான்

நெக்குருகி அழுதேன்;

அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.

11சாக்குத் துணியை

என் உடையாகக் கொண்டேன்;

ஆயினும், அவர்களது

பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.

12நகர வாயிலில் அமர்வோர்

என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;

குடிகாரர் என்னைப்பற்றிப்

பாட்டுக் கட்டுகின்றனர்.

13ஆண்டவரே! நான் தக்க காலத்தில்

உம்மை நோக்கி

விண்ணப்பம் செய்கின்றேன்;

கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்

எனக்குப் பதில்மொழி தாரும்;

துணை செய்வதில் நீர் மாறாதவர்.

14சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து

என்னைக் காத்தருளும்;

என்னை வெறுப்போரிடமிருந்தும்

ஆழ்கடலிலிருந்தும்

என்னை விடுவித்தருளும்.

15பெருவெள்ளம் என்னை

அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!

ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!

படுகுழி தன்வாய் திறந்து

என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!

16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;

உம் பேரன்பு நன்மை மிக்கது;

உமது பேரிரக்கத்தை முன்னிட்டு

என்னை நோக்கித் திரும்பும்.

17உமது முகத்தை

அடியேனுக்கு மறைக்காதேயும்;

நான் நெருக்கடியான

நிலையிலிருக்கிறேன்;

என் மன்றாட்டுக்கு

விரைவில் பதில்மொழி தாரும்.

18என்னை நெருங்கி,

என்னை விடுவித்தருளும்;

என் எதிரிகளிடமிருந்து

என்னை மீட்டருளும்.

19என் இழிவும், வெட்கக்கேடும்,

மானக்கேடும் உமக்குத் தெரியும்;

என் பகைவர் அனைவரும்

உம் முன்னிலையில் இருக்கின்றனர்.

20பழிச்சொல் என் இதயத்தைப்

பிளந்து விட்டது;

நான் மிகவும் வருந்துகிறேன்;

ஆறுதல் அளிப்பாருக்காகக்

காத்திருந்தேன்;

யாரும் வரவில்லை;

தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;

யாரையும் காணவில்லை.

21அவர்கள் என் உணவில்

நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;

என் தாகத்துக்குக் காடியைக்

குடிக்கக் கொடுத்தார்கள்.

22அவர்களுடைய விருந்துகளே

அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!

அவர்களுடைய படையல் விருந்துகளே

அவர்களுக்குப் பொறியாகட்டும்!

23அவர்களின் கண்கள் காணாதவாறு

ஒளியிழக்கட்டும்!

அவர்களின் இடைகள்

இடையறாது தள்ளாடட்டும்!

24உமது கடுஞ்சினத்தை

அவர்கள்மேல் கொட்டியருளும்;

உமது சினத்தீ

அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!

25அவர்களின் பாசறை பாழாவதாக!

அவர்களின் கூடாரங்களில்

ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!

26நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்

கொடுமைப்படுத்துகின்றார்கள்;

நீர் காயப்படுத்தினவர்களின்

நோவைப் பற்றித்

தூற்றித் திரிகின்றார்கள்.

27அவர்கள்மீது

குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!

உமது நீதித் தீர்ப்பினின்று

அவர்களைத் தப்ப விடாதேயும்!

28மெய்வாழ்வுக்குரியோரின்

அட்டவணையிலிருந்து

அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!

அவற்றை நேர்மையாளரின்

பெயர்களோடு சேர்க்காதேயும்!

29எளியேன் சிறுமைப்பட்டவன்;

காயமுற்றவன்;

கடவுளே! நீர் அருளும் மீட்பு

எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

30கடவுளின் பெயரை

நான் பாடிப் புகழ்வேன்;

அவருக்கு நன்றி செலுத்தி,

அவரை மாட்சிமைப்படுத்துவேன்;

31காளையை விட

இதுவே ஆண்டவருக்கு உகந்தது;

கொம்பும் விரிகுளம்பும்

உள்ள எருதைவிட

இதுவே அவருக்கு உகந்தது.

32எளியோர் இதைக் கண்டு

மகிழ்ச்சி அடைவார்கள்;

கடவுளை நாடித் தேடுகிறவர்களே,

உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

33ஆண்டவர்

ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்

செவிசாய்க்கின்றார்;

சிறைப்பட்ட தம் மக்களை

அவர் புறக்கணிப்பதில்லை.

34வானமும் வையமும் கடல்களும்

அவற்றில் வாழும் யாவும்

அவரைப் புகழட்டும்.

35கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;

யூதாவின் நகரங்களைக்

கட்டி எழுப்புவார்;

அப்பொழுது அவர்களுடைய மக்கள்

அங்கே குடியிருப்பார்கள்;

நாட்டைத் தங்களுக்குச்

சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

36ஆண்டவருடைய அடியாரின் மரபினர்

அதைத் தம்

உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;

அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்

அதில் குடியிருப்பர்.


69:4 திபா 35:19; யோவா 15:25.
69:9 யோவா 2:17; உரோ 15:3.
69:21 மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29.
69:22-23 உரோ 11:9-10.
69:25 திப 1:20.
69:28 விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks