திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)
1அனைத்துலகோரே!
கடவுளைப் போற்றி
ஆர்ப்பரியுங்கள்!
2அவரது பெயரின் மாட்சியைப்
புகழ்ந்து பாடுங்கள்;
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3கடவுளை நோக்கி
‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;
உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக
உம் எதிரிகள் உமது முன்னலையில்
கூனிக் குறுகுவர்;
4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;
அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;
உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’
என்று சொல்லுங்கள். (சேலா)
5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!
அவர் மானிடரிடையே ஆற்றிவரும்
செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.
6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;
ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.
அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7அவர் தமது வலிமையால்
என்றென்றும் அரசாள்கிறார்!
அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்
கவனித்து வருகின்றன;
கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்
தலைதூக்காதிருப்பராக! (சேலா)
8மக்களினங்களே!
நம் கடவுளைப் போற்றுங்கள்;
அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி
கேட்கச் செய்யுங்கள்.
9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;
அவர் நம் கால்களை இடற விடவில்லை.
10கடவுளே! எங்களை ஆய்ந்து,
வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;
11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;
பளுவான சுமைகளை
எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.
12மனிதரை எங்கள் தலைகள்மீது
நடந்துபோகச் செய்தீர்;
நெருப்பிலும் தண்ணீரிலும்
அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,
நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்
கொண்டுவந்து சேர்த்தீர்.
13எரிபலியுடன்
உமது இல்லத்தினுள் செல்வேன்;
என் பொருத்தனைகளை
உமக்குச் செலுத்துவேன்.
14அவற்றை என் துன்ப வேளையில்
என் நா உரைத்தது;
என் வாய் உறுதி செய்தது.
15கொழுத்த கன்றுகளை,
செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,
உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;
காளைகளையும்
வெள்ளாட்டுக் கிடாய்களையும்
உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!
அனைவரும் வாரீர்! கேளீர்!
அவர் எனக்குச் செய்ததனை
எடுத்துரைப்பேன்.
17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;
அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.
18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை
வளர்த்திருந்தேனாகில்,
என் தலைவர் எனக்குச்
செவிசாய்த்திருக்கமாட்டார்.
19ஆனால், உண்மையில்
கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;
என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.
20என் மன்றாட்டைப் புறக்கணியாத
கடவுள் போற்றி!
தம் பேரன்பை என்னிடமிருந்து
நீக்காத இறைவன் போற்றி!