திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்)
1கடவுளே, சீயோனில் உம்மைப்
புகழ்ந்து பாடுவது ஏற்புடையது!
உமக்குப் பொருத்தனைகள்
செலுத்துவதும் சால்புடையது!
2மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே!
மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.
3எங்கள் பாவங்களின் பளுவை
எங்களால் தாங்கமுடியவில்லை;
ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப்
போக்குகின்றீர்.
4நீர் தேர்ந்தெடுத்து
உம்மருகில் வைத்துக்கொள்ளும்
மனிதர் பேறு பெற்றோர்;
உம் கோவிலின் முற்றங்களில்
அவர்கள் உறைந்திடுவர்;
உமது இல்லத்தில், உமது திருமிகு
கோவிலில் கிடைக்கும் நன்மைகளால்
நாங்கள் நிறைவு பெறுவோம்.
5அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்;
எங்கள் மீட்பின் கடவுளே,
உமது நீதியின் பொருட்டு
எங்கள் மன்றாட்டுக்கு
மறுமொழி பகர்கின்றீர்;
உலகின் கடையெல்லைவரை
வாழ்வோர் அனைவருக்கும்
தொலையிலுள்ள தீவுகளில்
உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!
6வல்லமையை இடைக்கச்சையாகக்
கொண்ட நீர் உமது ஆற்றலால்
மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.
7கடல்களின் இரைச்சலையும்
அவற்றின் அலைகளின் ஓசையையும்
மக்களினங்களின் அமளியையும்
அடக்குகின்றீர்!
8உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
உம் அருஞ் செயல்களைக்
கண்டு அஞ்சுவர்;
கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக்
களிகூரச் செய்கின்றீர்!
9மண்ணுலகைப் பேணி
அதன் நீர்வளத்தையும்
நிலவளத்தையும் பெருக்கினீர்!
கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது;
அது தானியங்களை
நிரம்ப விளையச் செய்தது;
நீரே அவற்றை இவ்வாறு
விளையச் செய்துள்ளீர்.
10அதன் படைசால்களில்
தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;
அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து
மென்மழையால் மிருதுவாக்கினீர்;
அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
11ஆண்டு முழுவதும்
உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;
உம்முடைய வழிகள் எல்லாம்
வளம் கொழிக்கின்றன.
12பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்
செழுமை பொங்குகின்றன;
குன்றுகள் அக்களிப்பை
இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
13புல்வெளிகள் மந்தைகளை
ஆடையெனக் கொண்டுள்ளன;
பள்ளத்தாக்குகள் தானியங்களால்
தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன;
அவற்றில் எங்கும் ஆரவாரம்!
எம்மருங்கும் இன்னிசை!