back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 59 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 59 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் வீட்டருகே காத்திருந்து அவரைக் கொல்வதற்கென்று சவுல் ஆள்களை அனுப்பியபோது தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)

1என் கடவுளே! என்

எதிரிகளினின்று

என்னை விடுவித்தருளும்;

என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து

எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.

2தீமை செய்வோரிடமிருந்து

எனக்கு விடுதலை அளித்தருளும்;

கொலைவெறியரிடமிருந்து

என்னைக் காத்தருளும்.

3ஏனெனில், அவர்கள் என்னைக்

கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;

கொடியவர் என்னைத் தாக்கத்

திட்டமிட்டுள்ளனர்;

நானோ, ஆண்டவரே!

குற்றம் ஏதும் இழைக்கவில்லை;

பாவம் ஏதும் செய்யவில்லை;

4என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,

அவர்கள் ஓடிவந்து

என்னைத் தாக்க முனைகின்றனர்;

என்னை எதிர்கொள்ளுமாறு

எழுந்தருளும்;

என்னைக் கண்ணோக்கும்,

5படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் இஸ்ரயேலின் கடவுள்!

பிற இனத்தார் அனைவரையும்

தண்டிக்க எழுந்துவாரும்;

தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள்

எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)

6அவர்கள் மாலைவரை காத்திருந்து,

அதன்பின் நாய்களைப் போலக்

குரைத்து கொண்டு

நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.

7அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்;
அவர்களின் நாவின் சொற்கள்

வாள் போன்றவை;

‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்

யார்?’ என்கின்றார்கள்.

8ஆனால், ஆண்டவரே,

நீர் அவர்களைப் பார்த்து

எள்ளி நகைக்கின்றீர்;

பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து

நீர் ஏளனம் செய்கின்றீர்;

9நீரே என் ஆற்றல்! உமது உதவியை

எதிர்பார்க்கின்றேன்;

ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.

10என் கடவுள் தமது பேரன்பால்

என்னை எதிர்கொள்ள வருவார்;

கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை

நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.

11அவர்களை ஒரேயடியாய்க்

கொன்று விடாதேயும்;

இல்லையேல், உம் வல்லமையை

என் மக்கள் மறந்துவிடுவர்;

என் தலைவரே! எங்கள் கேடயமே!

அவர்களை உமது வலிமையால்

நிலைகுலையச் செய்யும்.

12அவர்களின் வாய் பேசுவதும்

நா உரைப்பதும் பாவமே;

அவர்கள் தற்பெருமை

அவர்களைச் சிக்கவைப்பதாக!

அவர்கள் சபிக்கின்றனர்;

அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.

13ஆகவே, வெகுண்டெழுந்து

அவர்களை அழித்துவிடும்;

இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;

அப்பொழுது, கடவுள்

யாக்கோபின் மரபினரை

ஆள்கின்றார் எனவும்

அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும்

உள்ளது எனவும் அவர்கள்

உணர்ந்து கொள்வார்கள். (சேலா)

14அவர்கள் மாலைவரை காத்திருந்து,

அதன்பின், நாய்களைப்போல

குரைத்துக் கொண்டு

நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.

15அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;

வயிறு நிறையாவிடில்,

முறுமுறுக்கின்றனர்.

16நானோ உமது ஆற்றலைப்

புகழ்ந்து பாடுவேன்;

காலையில் உமது பேரன்பைப் பற்றி

ஆர்ப்பரித்துப் பாடுவேன்;

ஏனெனில், நெருக்கடியான வேளையில்

நீர் எனக்கு அரணும்

அடைக்கலமுமாய் இருந்தீர்.

17என் ஆற்றல் நீரே!

உம்மைப் போற்றிப் பாடுவேன்;

ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;

கடவுளே எனக்குப் பேரன்பு!


59 தலைப்பு: 1 சாமு 19:11.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks