திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)
1கடவுளே! எனக்கு இரங்கும்,
எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;
இடர் நீங்கும்வரை
உம் இறக்கைகளின் நிழலையே
எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.
2உன்னதரான கடவுளை நோக்கி,
எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
இறைவனை நோக்கியே
நான் மன்றாடுகின்றேன்.
3வானகத்தினின்று அவர்
எனக்கு உதவி அனுப்பி
என்னைக் காத்தருள்வார்;
என்னை நசுக்குவோரை
இழிவுப்படுத்துவார். (சேலா)
கடவுள் தம் பேரன்பையும்
வாக்குப் பிறழாமையையும்
வெளிப்படுத்துவார்.
4மனிதரை வெறியோடு விழுங்கும்
சிங்கங்கள் போன்றவரிடையே
நான் கிடக்கின்றேன்;
அவர்களின் பற்கள்
ஈட்டியும் அம்பும் போன்றவை;
அவர்களின் நா
கூர்மையான வாள் போன்றது.
5கடவுளே! வானங்களுக்கு மேலாக
நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
6நான் நடக்கும் வழியில்
எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;
நான் மனம் ஒடிந்து போனேன்;
என் பாதையில் குழி வெட்டினர்;
அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)
7என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;
கடவுளே! என் உள்ளம்
உறுதியாயிருக்கின்றது;
நான் பாடுவேன்;
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
8என் நெஞ்சே, விழித்தெழு!
வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;
வைகறையை நான்
விழித்தெழச் செய்வேன்.
9என் தலைவரே!
மக்களினங்களிடையே
உமக்கு நன்றி செலுத்துவேன்;
எல்லா இனத்தாரிடையேயும்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10ஆண்டவரே! உமது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது!
உமது வாக்குப்பிறழாமை
முகில்களைத் தொடுகின்றது!
11கடவுளே! வானங்களுக்கு மேலாக
நீர் உயர்வு பெறுவீராக;
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.