திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பாவ மன்னிப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது)
1கடவுளே! உமது பேரன்புகேற்ப
எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி
என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
3ஏனெனில், என் குற்றங்களை
நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும்
என் மனக்கண்முன் நிற்கின்றது.
4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன்;
எனவே, உம் தீர்ப்பினால்
உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;
உம் தண்டனைத் தீர்ப்பில்
நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5இதோ! தீவினையோடு
என் வாழ்வைத் தொடங்கினேன்;
பாவத்தோடே என் அன்னை
என்னைக் கருத்தாங்கினாள்.
6இதோ! நீர் விரும்புவது
உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;
நான் தூய்மையாவேன்.
என்னைக் கழுவியருளும்;
உறைபனியிலும் வெண்மையாவேன்.
8மகிழ்வொலியும் களிப்போசையும்
நான் கேட்கும்படி செய்யும்;
நீர் நொறுக்கிய என் எலும்புகள்
களிகூர்வனவாக!
9என் பாவங்களைப் பாராதபடி
உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;
என் பாவக்கறைகளை எல்லாம்
துடைத்தருளும்.
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை,
புதுப்பிக்கும் ஆவியை,
என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12உம் மீட்பின் மகிழ்ச்சியை
மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து
என்னைத் தாங்கியருளும்.
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு
உம் வழிகளைக் கற்பிப்பேன்;
பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
14கடவுளே! எனது மீட்பின் கடவுளே!
இரத்தப் பழியினின்று
என்னை விடுவித்தருளும்;
அப்பொழுது, என் நா
உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15என் தலைவரே!
என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய்
உமக்குப் புகழ் சாற்றிடும்.
16ஏனெனில், பலியினால்
உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும்
நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி
நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த
உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
18சீயோனுக்கு இன்முகம் காட்டி
நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை
மீண்டும் கட்டுவீராக!
19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்
முறையான பலிகளை விரும்புவீர்;
மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்
பலியாகச் செலுத்தப்படும்.