back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 51 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 51 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாவ மன்னிப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது)

1கடவுளே! உமது பேரன்புகேற்ப

எனக்கு இரங்கும்;

உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப

என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி

என்னைக் கழுவியருளும்;

என் பாவம் அற்றுப்போகும்படி

என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;

3ஏனெனில், என் குற்றங்களை

நான் உணர்கின்றேன்;

என் பாவம் எப்போதும்

என் மனக்கண்முன் நிற்கின்றது.

4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;

உம் பார்வையில் தீயது செய்தேன்;

எனவே, உம் தீர்ப்பினால்

உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;

உம் தண்டனைத் தீர்ப்பில்

நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

5இதோ! தீவினையோடு

என் வாழ்வைத் தொடங்கினேன்;

பாவத்தோடே என் அன்னை

என்னைக் கருத்தாங்கினாள்.

6இதோ! நீர் விரும்புவது

உள்ளத்து உண்மையையே;

மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.

7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;

நான் தூய்மையாவேன்.

என்னைக் கழுவியருளும்;

உறைபனியிலும் வெண்மையாவேன்.

8மகிழ்வொலியும் களிப்போசையும்

நான் கேட்கும்படி செய்யும்;

நீர் நொறுக்கிய என் எலும்புகள்

களிகூர்வனவாக!

9என் பாவங்களைப் பாராதபடி

உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;

என் பாவக்கறைகளை எல்லாம்

துடைத்தருளும்.

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை

என்னுள்ளே படைத்தருளும்;

உறுதிதரும் ஆவியை,

புதுப்பிக்கும் ஆவியை,

என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து

என்னைத் தள்ளிவிடாதேயும்;

உமது தூய ஆவியை

என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.

12உம் மீட்பின் மகிழ்ச்சியை

மீண்டும் எனக்கு அளித்தருளும்;

தன்னார்வ மனம் தந்து

என்னைத் தாங்கியருளும்.

13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு

உம் வழிகளைக் கற்பிப்பேன்;

பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.

14கடவுளே! எனது மீட்பின் கடவுளே!

இரத்தப் பழியினின்று

என்னை விடுவித்தருளும்;

அப்பொழுது, என் நா

உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

15என் தலைவரே!

என் இதழ்களைத் திறந்தருளும்;

அப்பொழுது, என் வாய்

உமக்குப் புகழ் சாற்றிடும்.

16ஏனெனில், பலியினால்

உம்மை மகிழ்விக்க முடியாது;

நான் எரிபலி செலுத்தினாலும்

நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17கடவுளுக்கேற்ற பலி

நொறுங்கிய நெஞ்சமே;

கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த

உளத்தை நீர் அவமதிப்பதில்லை.

18சீயோனுக்கு இன்முகம் காட்டி

நன்மை செய்யும்;

எருசலேமின் மதில்களை

மீண்டும் கட்டுவீராக!

19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்

முறையான பலிகளை விரும்புவீர்;

மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்

பலியாகச் செலுத்தப்படும்.


51 தலைப்பு: 2 சாமு 12:1-8.
51:4 உரோ 3:4.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks