திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
செல்வம் பயன் அற்றது
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)
1மக்களினங்களே, அனைவரும்
இதைக் கேளுங்கள்;
மண்ணுலகில் வாழ்வோரே,
யாவரும் செவிகொடுங்கள்.
2தாழ்ந்தோரே, உயர்ந்தோரே,
செல்வர்களே, ஏழைகளே,
அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.
3என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்;
என் மனம் விவேகமானவற்றை
ஆழ்ந்து சிந்திக்கும்.
4நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில்
நான் கருத்தாய் உள்ளேன்;
யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.
5துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்?
என்னை வளைத்துக்கொண்டு
கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு
நான் அஞ்சுவானேன்?
6தம் செல்வத்தில்
நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ
தம் செல்வப்பெருக்கைக் குறித்துப்
பெருமையாகப் பேசுகின்றனர்.
7உண்மையில், தம்மைதாமே
மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;
தம் உயிரை மீட்க எதையும்
கடவளுக்குத் தர இயலாது.
8மனித உயிரின் ஈட்டுத் தொகை
மிகப் பெரிது;
எவராலும் அதனைச் செலுத்த இயலாது.
9ஒருவரால் என்றென்றும்
வாழ்ந்திடமுடியுமா?
படுகுழியைக் காணாமல்
இருந்திட முடியுமா?
10ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்
மாண்டழிவதுபோல,
ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை
நாம் காண்கின்றோம் அன்றோ!
அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்
பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.
11கல்லறைகளே* அவர்களுக்கு
நிலையான வீடுகள்!
அவையே எல்லாத் தலைமுறைக்கும்
அவர்கள் குடியிருப்பு!
அவர்களுக்குத் தங்கள் பெயரில்
நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.
12ஒருவர் தம் மேன்மையிலேயே
நிலைத்திருக்க முடியாது;
அவர் விலங்குகளைப் போலவே
மாண்டழிவார்.
13தம்மையே மதியீனமாக
நம்பியிருப்போரின் முடிவு இதுவே;
தம் சொத்திலேயே மகிழ்ச்சி
கொள்வோரின் கதி இதுவே. (சேலா)
14பலியாடுகளைப் போலவே அவர்களும்
சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்;
சாவே அவர்களின் மேய்ப்பன்;
*அவர்கள் நேரடியாகக்
கல்லறைக்குள் செல்வர்;*
அப்பொழுது அவர்களது உருவம்
மாய்ந்து போகும்;
பாதாளமே அவர்களது குடியிருப்பு.
15ஆனால், கடவுள்
என்னுயிரை மீட்பது உறுதி;
பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து
என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)
16சிலர் செல்வர் ஆனாலோ,
அவர்களின் குடும்பச் செல்வம்
பெருகினாலோ,
அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!
17ஏனெனில் சாகும்போது அவர்கள்
எதையும் எடுத்துப் போவதில்லை;
அவர்களது செல்வமும்
அவர்கள்பின் செல்வதில்லை.
18உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை
ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,
‛நீங்கள் நன்மையையே
நாடினீர்கள்’ என
மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,
19அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு
சேர்ந்து கொள்வர்;
ஒருபோதும் பகலொளியைக்
காணப் போவதில்லை.
20மனிதர் தம் மேன்மையிலேயே
நிலைத்திருக்க முடியாது;
அவர்கள் விலங்குகளைப் போலவே
மாண்டழிவர்.