back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 49 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 49 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

செல்வம் பயன் அற்றது
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

1மக்களினங்களே, அனைவரும்

இதைக் கேளுங்கள்;

மண்ணுலகில் வாழ்வோரே,

யாவரும் செவிகொடுங்கள்.

2தாழ்ந்தோரே, உயர்ந்தோரே,

செல்வர்களே, ஏழைகளே,

அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.

3என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்;

என் மனம் விவேகமானவற்றை

ஆழ்ந்து சிந்திக்கும்.

4நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில்

நான் கருத்தாய் உள்ளேன்;

யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.

5துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்?

என்னை வளைத்துக்கொண்டு

கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு

நான் அஞ்சுவானேன்?

6தம் செல்வத்தில்

நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ

தம் செல்வப்பெருக்கைக் குறித்துப்

பெருமையாகப் பேசுகின்றனர்.

7உண்மையில், தம்மைதாமே

மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;

தம் உயிரை மீட்க எதையும்

கடவளுக்குத் தர இயலாது.

8மனித உயிரின் ஈட்டுத் தொகை

மிகப் பெரிது;

எவராலும் அதனைச் செலுத்த இயலாது.

9ஒருவரால் என்றென்றும்

வாழ்ந்திடமுடியுமா?

படுகுழியைக் காணாமல்

இருந்திட முடியுமா?

10ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்

மாண்டழிவதுபோல,

ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை

நாம் காண்கின்றோம் அன்றோ!

அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்

பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.

11கல்லறைகளே* அவர்களுக்கு

நிலையான வீடுகள்!

அவையே எல்லாத் தலைமுறைக்கும்

அவர்கள் குடியிருப்பு!

அவர்களுக்குத் தங்கள் பெயரில்

நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.

12ஒருவர் தம் மேன்மையிலேயே

நிலைத்திருக்க முடியாது;

அவர் விலங்குகளைப் போலவே

மாண்டழிவார்.

13தம்மையே மதியீனமாக

நம்பியிருப்போரின் முடிவு இதுவே;

தம் சொத்திலேயே மகிழ்ச்சி

கொள்வோரின் கதி இதுவே. (சேலா)

14பலியாடுகளைப் போலவே அவர்களும்

சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்;

சாவே அவர்களின் மேய்ப்பன்;

*அவர்கள் நேரடியாகக்

கல்லறைக்குள் செல்வர்;*

அப்பொழுது அவர்களது உருவம்

மாய்ந்து போகும்;

பாதாளமே அவர்களது குடியிருப்பு.

15ஆனால், கடவுள்

என்னுயிரை மீட்பது உறுதி;

பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து

என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)

16சிலர் செல்வர் ஆனாலோ,

அவர்களின் குடும்பச் செல்வம்
பெருகினாலோ,

அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!

17ஏனெனில் சாகும்போது அவர்கள்

எதையும் எடுத்துப் போவதில்லை;

அவர்களது செல்வமும்

அவர்கள்பின் செல்வதில்லை.

18உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை

ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,

‛நீங்கள் நன்மையையே

நாடினீர்கள்’ என

மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,

19அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு

சேர்ந்து கொள்வர்;

ஒருபோதும் பகலொளியைக்

காணப் போவதில்லை.

20மனிதர் தம் மேன்மையிலேயே

நிலைத்திருக்க முடியாது;

அவர்கள் விலங்குகளைப் போலவே

மாண்டழிவர்.


49:11 * ‘உள்ளுறுப்புகளே’ என்பது எபிரேய பாடம்.
49:14 *…* ‘நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks