back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 35 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 35 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே, எனக்கெதிராய்

வழக்காடுவோருடன் வழக்காடும்;

என்மீது போர் தொடுப்போரோடு

போர் புரியும்.

2கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்;

எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.

3என்னைத் துரத்திவரும் எதிரிகளைத்

தடுத்து நிறுத்தும்;

ஈட்டியையும் வேலையும் கையிலெடும்;

‛நானே உன் மீட்பர்’ என்று

என் உள்ளத்திற்குச் சொல்லும்.

4என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்;

மானக்கேடுற்று இழிவடையட்டும்;

எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர்,

புறமுதுகிட்டு ஓடட்டும்.

5ஆண்டவரின் தூதர் அவர்களை

விரட்டியடிக்க,

காற்றில் பறக்கும் பதர்போல

அவர்கள் சிதறட்டும்.

6ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட,

அவர்கள் வழி இருளும்

சறுக்கலும் ஆகட்டும்.

7ஏனெனில், காரணமின்றி

எனக்குக் கண்ணி வைத்தனர்;

காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.

8அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்;

அவர்களுக்கு வைத்த கண்ணியில்

அவர்களே சிக்கக்கொள்ளட்டும்;

அவர்கள் தோண்டிய குழியில்
அவர்களே விழட்டும்.

9என் உள்ளம்

ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்;

அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.

10‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?

எளியோரை வலியோரின் கையினின்றும்

எளியோரையும் வறியோரையும்

கொள்ளையடிப்போர் கையினின்றும்

விடுவிப்பவர் நீரே” என்று

என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.

11பொய்ச்சான்று சொல்வோர்

எனக்கெதிராய் எழுகின்றனர்;

எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி

என்னிடம் வினவுகின்றனர்.

12நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்;

அவர்களோ, அதற்குப் பதிலாக

எனக்குத் தீங்கிழைத்தனர்.

என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.

13நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது,

சாக்கு உடுத்திக் கொண்டேன்;

நோன்பிருந்து என்னை

வருத்திக் கொண்டேன்;

முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.

14நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும்

அவர்களுக்காய் மன்றாடினேன்;

தாய்க்காகத் துக்கம்

கொண்டாடுவோரைப்போல

வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.

15நான் தடுக்கி விழுந்தபோது

அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்;

எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்;

யாதொன்றும் அறியாத என்னைச்

சின்னாபின்னமாக்கி

ஓயாது பழித்துரைத்தனர்.

16இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து

அவர்கள் என்னை இகழ்ந்தனர்;

எள்ளி நகையாடினர்;

என்னைப் பார்த்துப்

பற்களை நறநறவென்று கடித்தனர்.

17என் தலைவரே, இன்னும் எத்தனை நாள்

இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?;

என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும்

என் ஆருயிரைச்

சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.

18மாபெரும் சபையில்

உமக்கு நன்றி செலுத்துவேன்;

திரளான மக்களிடையே

உம்மைப் புகழ்வேன்.

19வஞ்சகரான என் எதிரிகள்

என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்;

காரணமின்றி என்னை வெறுப்போர்

கண்சாடை காட்டி இகழவிடாதீர்.

20ஏனெனில், அவர்களது பேச்சு

சமாதானத்தைப் பற்றியதன்று;

நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக

அவர்கள் வஞ்சகமாய்ச்
சூழ்ச்சி செய்கின்றனர்.

21எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து,

‛ஆ! ஆ! நாங்களே எங்கள்

கண்ணால் கண்டோம்’ என்கின்றனர்.

22ஆண்டவரே, நீர் இதைக் கண்டும்

மௌனமாய் இராதீர்;

என் தலைவரே, என்னைவிட்டுத்

தொலையில் போய்விடாதீர்.

23என் கடவுளே, கிளர்ந்தெழும்!

என் தலைவரே, விழித்தெழுந்து

என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.

24என் கடவுளாகிய ஆண்டவரே,

உமது நீதிக்கேற்ப

என் நேர்மையை நிலைநாட்டும்!

அவர்கள் என்னைப் பார்த்துக்

களிக்க இடமளியாதேயும்!

25அவர்கள் தங்கள் உள்ளத்தில்

‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச்

சொல்லாதபடி பாரும்!

‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப்

பேசிக்கொள்ளாதபடி பாரும்!

26எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து

மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும்

கலக்கமுறட்டும்! என்னைவிடத்

தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு

வெட்கமும் மானக்கேடும்

மேலாடை ஆகட்டும்!

27என் நேர்மை நிலைநாட்டப்படுவதை

விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்;

‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!

அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக்

காண விரும்புவோர்’ என்று

எப்பொழுதும் சொல்லட்டும்.

28அப்பொழுது, என் நா

உம் நீதியை எடுத்துரைத்து,

நாள் முழுதும் உம் புகழ் பாடும்.


35:19 திபா 69:4; யோவா 16:25.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks