திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பாவ அறிக்கையும் மன்னிப்பும்
(தாவீதின் அறப்பாடல்)
1எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,
எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,
அவர் பேறு பெற்றவர்.
2ஆண்டவர் எந்த மனிதரின்
தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,
அவர் பேறுபெற்றவர்.
3என் பாவத்தை அறிக்கையிடாதவரை,
நாள்முழுவதும் நான் கதறி அழுததால்,
என் எலும்புகள் கழன்று போயின.
4ஏனெனில், இரவும் பகலும் உம் கை
எனக்கு எதிராக ஓங்கி நின்றது;
கோடையின் வறட்சிபோல
என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)
5‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;
என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை
ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும்
பாவத்தையும் போக்கினீர். (சேலா)
6ஆகவே, துன்ப வேளையில்
உம் அன்பர் அனைவரும்
உம்மை நோக்கி மன்றாடுவர்;
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும்
அவர்களை அது அணுகாது.
7நீரே எனக்குப் புகலிடம்;
இன்னலினின்று என்னை நீர்
பாதுகாக்கின்றீர்;
உம் மீட்பினால் எழும் ஆரவாரம்
என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா)
8நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;
நீ நடக்க வேண்டிய வழியை
உனக்குக் காட்டுவேன்;
உன்னைக் கண்ணோக்கி,
உனக்கு அறிவுரை கூறுவேன்.
9கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி
உன்னைப் பின்தொடர்ந்து வராத
குதிரை போன்றோ கோவேறு
கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!
10பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல;
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை
அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.
11நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு
அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,
நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.