திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கடவுள் தேர்ந்து கொண்ட அரசர்
1வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச்
சூழ்ச்சி செய்வதேன்?
2ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு
பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள்
அணிவகுத்து நிற்கின்றார்கள்;
ஆள்வோர் ஒன்றுகூடிச்
சதிசெய்கின்றார்கள்;
3‛அவர்கள் பூட்டிய தளைகளைத்
தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை
நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’
என்கின்றார்கள்.
4விண்ணுலகில் வீற்றிருப்பவர்
எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து
ஏளனம் செய்கின்றார்.
5அவர் சினமுற்று
அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக்
கலங்கடிக்கின்றார்;
6‛என் திருமலையாகிய சீயோனில்
நானே என் அரசரைத்
திருநிலைப்படுத்தனேன்.’
7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை
நான் அறிவிக்கின்றேன்;
‛நீர் என் மைந்தர்; இன்று நான்
உம்மைப் பெற்றெடுத்தேன்.
8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிறநாடுகளை உமக்கு
உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை
உமக்கு உடைமையாக்குவேன்.
9இருப்புக் கோலால்
நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல
அவர்களை நொறுக்குவீர்.’
10ஆகவே, மன்னர்களே,
விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே,
எச்சரிக்கையாயிருங்கள்.
11அச்சத்தோடு ஆண்டவரை
வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்!
12அவர் சினங்கொள்ளாதபடியும்
நீங்கள் வழியில் அழியாதபடியும்
அவரது காலடியை முத்தமிடுங்கள்;
இல்லையேல், அவரது சினம்
விரைவில் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர்
அனைவரும் பேறுபெற்றோர்.