திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
என்றுமுள பேரன்பு வாழியவே!
1ஆண்டவருக்கு நன்றி
செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்.
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
2தெய்வங்களின் இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
3தலைவர்களின் தலைவருக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
4தாம் ஒருவராய் மாபெரும்
அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
5வான்வெளியை
மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
6கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
7பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
8பகலை ஆள்வதற்கெனக்
கதிரவனை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
9இரவை ஆள்வதற்கென
நிலாவையும் விண்மீன்களையும்
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
10எகிப்தின் தலைப்பேறுகளைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை
வெளிக்கொணர்ந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
12தோளின் வலிமையாலும்
ஓங்கிய புயத்தாலும் அதைச்
செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
13செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
14அதன் நடுவே இஸ்ரயேலை
நடத்திச் சென்றவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
15பார்வோனையும் அவன் படைகளையும்
செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
16பாலை நிலத்தில் தம் மக்களை
வழிநடத்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
17மாபெரும் மன்னர்களை வெட்டி
வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
18வலிமைமிகு மன்னர்களைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
19எமோரியரின் மன்னன் சீகோனைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
20பாசானின் மன்னன் ஓகைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
21அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
22அதைத் தம் அடியார்களாகிய
இஸ்ரயேலர்க்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
23தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு
கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
24நம் எதிரிகளினின்று நம்மை
விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
25உடல்கொண்ட அனைத்திற்கும்
உணவூட்டுபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
26விண்ணுலகின் இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.