திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)
1ஆண்டவர் நம் சார்பாக
இருந்திராவிடில் –
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,
நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,
அவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4அப்பொழுது, வெள்ளம்
நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது
புரண்டோடியிருக்கும்;
5கொந்தளிக்கும் வெள்ளம்
நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.
6ஆண்டவர் போற்றி! போற்றி!
எதிரிகளின் பற்களுக்கு
அவர் நம்மை இரையாக்கவில்லை.
7வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த
பறவைபோல் ஆனோம்;
கண்ணி அறுந்தது;
நாம் தப்பிப் பிழைத்தோம்.
8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கியவர் அவரே!