back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 107 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 107 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஐந்தாம் பகுதி
(107-150)

கடவுளின் கருணையைப் புகழ்தல்

1ஆண்டவருக்கு

நன்றி செலுத்துங்கள்;

ஏனெனில், அவர் நல்லவர்;

என்றென்றும் உள்ளது

அவரது பேரன்பு.

2ஆண்டவரால் மீட்படைந்தோர்,

எதிரியின் கையினின்று

அவரால் மீட்கப்பட்டோர்,

3கிழக்கினின்றும் மேற்கினின்றும்,

வடக்கினின்றும் தெற்கினின்றும்,

பல நாடுகளினின்றும்

ஒன்று சேர்க்கப்பட்டோர்

சொல்வார்களாக.

4பாலைநிலத்தில் பாழ் வெளியில்

சிலர் அலைந்து திரிந்தனர்;

குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல

அவர்கள் வழி காணவில்லை;

5பசியுற்றனர்; தாகமுற்றனர்;

மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.

6தம் நெருக்கடியில்

ஆண்டவரைக் கூவியழைத்தனர்;

அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து

அவர்களை அவர் விடுவித்தார்.

7நேரிய பாதையில்

அவர்களை வழிநடத்தினார்;

குடியிருக்கும் நகரை

அவர்கள் அடையச் செய்தார்.

8ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,

மானிடர்களுக்காக அவர் செய்த

வியத்தகு செயல்களை முன்னிட்டு,

அவர்கள் அவருக்கு

நன்றி செலுத்துவார்களாக!

9ஏனெனில், தாகமுற்றோர்க்கு

அவர் நிறைவளித்தார்;

பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

10சிலர் காரிருளிலும்

சாவின் நிழலிலும் கிடந்தனர்;

விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.

11ஏனெனில், அவர்கள்

இறைவனின் கட்டளைகளை

எதிர்த்து நின்றனர்;

உன்னதரின் அறிவுரைகளைப்

புறக்கணித்தனர்.

12கடும் வேலையால்

அவர் அவர்களின் உள்ளத்தைச்

சிறுமைப்படுத்தினார்;

அவர்கள் நிலைகுலைந்து போயினர்;

அவர்களுக்குத் துணைசெய்வார்

எவருமிலர்.

13அவர்கள் தம் நெருக்கடியில்

ஆண்டவரைக் கூவியழைத்தனர்;

அவர் அவர்களைத்

துன்பங்களிலிருந்து விடுவித்தார்.

14காரிருளிலும் சாவின் நிழலிலும்

கிடந்த அவர்களை

அவர் வெளிக்கொணர்ந்தார்.

அவர்களைப் பிணித்திருந்த

தளைகளைத் தகர்த்தெறிந்தார்.

15ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,

மானிடரான அவர்களுக்கு அவர் செய்த

வியத்தகு செயல்களை முன்னிட்டு,

அவர்கள் அவருக்கு

நன்றி செலுத்துவார்களாக!

16ஏனெனில், வெண்கலக் கதவுகளை

அவர் தகர்த்துவிட்டார்;

இரும்புத் தாழ்ப்பாள்களை

உடைத்துவிட்டார்.

17சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு

நோய்களுக்கு உள்ளாயினர்;

அவர்களுடைய

தீச்செயல்களின் பொருட்டுத்

துன்பங்களுக்கு உள்ளாயினர்.

18எல்லா உணவையும்

அவர்களின் மனம் வெறுத்தது;

சாவின் வாயில்களை

அவர்கள் நெருங்கினார்கள்.

19அவர்கள் தம் நெருக்கடியில்

ஆண்டவரைக் கூவியழைத்தனர்;

அவர் அவர்களைத்

துன்பங்களினின்று விடுவித்தார்.

20தம் வார்த்தையை அவர் அனுப்பி

அவர்களைக் குணப்படுத்தினார்;

அழிவினின்று அவர்களை விடுவித்தார்.

21ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,

மானிடரான அவர்களுக்கு

அவர் செய்த

வியத்தகு செயல்களை முன்னிட்டு,

அவர்கள் அவருக்கு நன்றி

செலுத்துவார்களாக!

22நன்றிப் பலிகளை

அவர்கள் செலுத்துவார்களாக!

அக்களிப்போடு அவர்தம் செயல்களைப்

புகழ்ந்தேத்துவார்களாக!

23சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;

நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.

24அவர்களும்

ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்;

ஆழ்கடலில் அவர்தம்

வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.

25அவர் ஒரு வார்த்தை சொல்ல,

புயல் காற்று எழுந்தது;

அது கடலின் அலைகளைக்

கொந்தளிக்கச் செய்தது.

26அவர்கள் வானமட்டும்

மேலே வீசப்பட்டனர்;

பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்;

அவர்கள் உள்ளமோ

இக்கட்டால் நிலைகுலைந்தது.

27குடிவெறியரைப் போல்

அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்;

அவர்களின் திறனெல்லாம்

பயனற்றுப் போயிற்று.

28தம் நெருக்கடியில் அவர்கள்

ஆண்டவரைக் கூவியழைத்தனர்;

அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து

அவர் அவர்களை விடுவித்தார்.

29புயல்காற்றை அவர்

பூந்தென்றலாக மாற்றினார்;

கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.

30அமைதி உண்டானதால்

அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;

அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு

அவர் அவர்களைக்

கொண்டு போய்ச் சேர்த்தார்.

31ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,

மானிடரான அவர்களுக்கு அவர் செய்த

வியத்தகு செயல்களை முன்னிட்டு

அவர்கள் அவருக்கு

நன்றி செலுத்தவார்களாக!

32மக்களின் பேரவையில்

அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக!

பெரியோரின் மன்றத்தில்

அவரைப் போற்றுவார்களாக!

33ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்;

நீரோடைகளை அவர்

வறண்ட தரையாக்கினார்.

34செழிப்பான நிலத்தை உவர்

நிலமாக்கினார்;

அங்குக் குடியிருந்தோரின்

தீச்செயலை முன்னிட்டு

இப்படிச் செய்தார்.

35பாலை நிலத்தையோ

நீர்த் தடாகமாக மாற்றினார்;

வறண்ட நிலத்தை

நீருற்றுகளாகச் செய்தார்.

36பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்;

அவர்கள் அங்கே குடியிருக்க

நகரொன்றை அமைத்தனர்.

37அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்;

திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்;

அறுவடைக்கான கனிகளை

அவை ஈன்றன.

38அவர் ஆசி வழங்கினார்; அவர்கள்

மிகுதியாகப் பல்கிப் பெருகினர்;

அவர்களின் கால்நடைகளைக்

குறைந்துபோக விடவில்லை.

39பின்பு, அவர்களின் தொகை குறைந்தது;

அவர்கள் ஒடுக்கப்பட்டு,

துன்புறுத்துப்பட்டு

இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.

40தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி,

அவர்களைப் பாதையற்ற

பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.

41ஆனால், எளியோரை அவர்

துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார்,

அவர்கள் குடும்பங்களை

மந்தை போல் பெருகச் செய்தார்.

42நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து

மகிழ்கின்றனர்;

தீயோர் யாவரும் தங்கள் வாயை

மூடிக்கொள்கின்றனர்.

43ஞானமுள்ளோர் இவற்றைக்

கவனத்தில் கொள்ளட்டும்!

அவர்கள் ஆண்டவரின் பேரன்பை

உணர்ந்து கொள்ளட்டும்!


107:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks