திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
படைப்பின் மேன்மை
1என் உயிரே!
ஆண்டவரைப் போற்றிடு!
என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
நீர் மாண்பையும் மாட்சியையும்
அணிந்துள்ளவர்.
2பேரொளியை
ஆடையென அணிந்துள்ளவர்;
வான்வெளியைக்
கூடாரமென விரித்துள்ளவர்;
3நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்
அடித்தளத்தை அமைத்துள்ளவர்;
கார் முகில்களைத்
தேராகக் கொண்டுள்ளவர்;
காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!
4காற்றுகளை உம்
தூதராய் நியமித்துள்ளவர்;
தீப்பிழம்புகளை உம்
பணியாளராய்க் கொண்டுள்ளவர்.
5நீவீர் பூவுலகை அதன்
அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;
அது என்றென்றும் அசைவுறாது.
6அதனை ஆழ்கடல்
ஆடையென மூடியிருந்தது;
மலைகளுக்கும் மேலாக
நீர்த்திரள் நின்றது;
7நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;
நீவீர் இடியென முழங்க,
அது திகைப்புற்று ஓடியது;
8அது மலைகள்மேல் ஏறி,
பள்ளத்தாக்குகளில் இறங்கி,
அதற்கெனக் குறித்த இடத்தை
அடைந்தது;
9அது மீறிச்செல்லாதவாறு
அதற்கு எல்லை வகுத்தீர்;
பூவுலகை அது மீண்டும்
மூடிவிடாதபடி செய்தீர்;
10பள்ளத்தாக்குகளில்
நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;
அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
11அவை காட்டு விலங்குகள்
அனைத்திற்கும் குடிக்கத் தரும்;
காட்டுக் கழுதைகள்
தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;
12நீருற்றுகளின் அருகில்
வானத்துப் பறவைகள்
கூடுகட்டிக் கொள்கின்றன;
அவை மரக்கிளைகளினின்று
இன்னிசை இசைக்கின்றன;
13உம் மேலறைகளினின்று
மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;
உம் செயல்களின் பணியால்
பூவுலகம் நிறைவடைகின்றது.
14கால்நடைகளுக்கெனப்
புல்லை முளைக்கச் செய்கின்றீர்;
மானிடருக்கெனப் பயிர்வகைகளை
வளரச் செய்கின்றர்;
இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு
உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
15மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத்
திராட்சை இரசமும்,
முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்
மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட
அப்பமும் அளிக்கின்றீர்.
16ஆண்டவரின் மரங்களுக்கு —
லெபனோனில் அவர் நட்ட
கேதுரு மரங்களுக்கு —
நிறைய நீர் கிடைக்கின்றது.
17அங்கே பறவைகள்
கூடுகள் கட்டுகின்றன;
தேவதாரு மரங்களில்
கொக்குகள் குடியிருக்கின்றன.
18உயர்ந்த மலைகள்
வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;
கற்பாறைகள்
குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.
19காலங்களைக் கணிக்க
நிலவை நீர் அமைத்தீர்;
ஆதவன் தான் மறையும்
நேரத்தை அறிவான்.
20இருளை நீர் தோன்றச் செய்யவே,
இரவு வருகின்றது;
அப்போது, காட்டு விலங்குகள்
அனைத்தும் நடமாடும்.
21இளஞ்சிங்கங்கள் இரைக்காகக்
கர்ச்சிக்கின்றன;
அவை இறைவனிடமிருந்து
தங்கள் உணவைத் தேடுகின்றன.
22கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று
தம் குகைகளுக்குள்
படுத்துக்கொள்கின்றன.
23அப்பொழுது மானிடர்
வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;
அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.
24ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்
எத்தனை எத்தனை!
நீர் அனைத்தையும்
ஞானத்தோடு செய்துள்ளீர்!
பூவுலகம்
உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
25இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;
அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக
வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
26அங்கே கப்பல்கள் செல்கின்றன;
அங்கே துள்ளிவிளையாட
லிவியத்தானைப் படைத்தீர்!
27தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று
இவையெல்லாம்
உம்மையே நம்பியிருக்கின்றன.
28நீர் கொடுக்க,
அவை சேகரித்துக் கொள்கின்றன;
நீர் உமது கையைத் திறக்க,
அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
29நீர் உமது முகத்தை மறைக்க,
அவை திகிலடையும்;
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,
அவை மாண்டு மறுபடியும்
புழுதிக்கே திரும்பும்.
30உமது ஆவியை நீர் அனுப்ப,
அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்.
31ஆண்டவரின் மாட்சி
என்றென்றும் நிலைத்திருப்பதாக!
அவர் தம் செயல்களைக் குறித்து
மகிழ்வாராக!
32மண்ணுலகின்மீது
அவர் தம் பார்வையைத் திருப்ப,
அது நடுங்கும்; மலைகளை அவர் தொட,
அவை புகை கக்கும்.
33நான் வாழும் நாளெல்லாம்
ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
என்னுயிர் உள்ளவரையிலும்
என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.
34என் தியானப் பாடல்
அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
35பாவிகள் பூவுலகினின்று
ஒழிந்து போவார்களாக!
தீயோர்கள் இனி
இல்லாது போவார்களாக!
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!
அல்லேலூயா!