back to top
HomeTamilநீதிமொழிகள் அதிகாரம் - 20 - திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே.

2அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.

3விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.

4சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.

5மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.

6பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?

7எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.

8மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.

9“என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?

10பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.

11சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.

12கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.

13தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.

14ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.

15பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.

16அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.

17வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.

18நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.

19வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.

20தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும்.

21தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.

22“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.

23பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.

24மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?

25எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.

26ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.

27ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.

28அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.

29இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.

30நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks