back to top
HomeTamilஎண்ணிக்கை அதிகாரம் - 23 - திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரம் – 23 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார்.

2பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.

3பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ளும்; நான் போகிறேன்; அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்” என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார்.

4கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்” என்றார்.

5ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்றார்.

6அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான்.

7பிலயாம் திருஉரையாகக் கூறியது:

“ஆராமிலிருந்து பாலாக்கு,

கீழை மலைகளிலிருந்து

மோவாபின் மன்னன், என்னைக்

கொண்டு வந்துள்ளான்.

‘வா, எனக்காக யாக்கோபைச் சபி!

வா, இஸ்ரயேலைப் பழித்துரை!’

என்கிறான்.

8கடவுள் சபிக்காதவனை நான்

எப்படிச் சபிப்பேன்?

கடவுள் பழித்துரைக்காதவனை

நான் எப்படிப் பழித்துரைப்பேன்?

9மலைகளின் உச்சியிலிருந்து

நான் அவனை நோக்குகிறேன்;

குன்றுகளிலிருந்து நான்

அவனைப் பார்க்கிறேன்;

இதோ! தனியாக வாழ்கின்றதொரு

மக்கள் கூட்டம்.

இது வேற்றினத்தாரோடு தன்னையும்

ஓர் இனமாய்க் கொள்ளவில்லை;

10யாக்கோபின் தூசியை

எண்ணிக்கையிடவோ

இஸ்ரயேலின் கால் பங்கைக்

கணக்கெடுக்கவோ

யாரால் இயலும்?

நான் நேர்மையாளர் இறப்பை

அடைவேனாக!

என் முடிவும் அவர் போன்று

இருப்பதாக!”

11பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்; ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!” என்றான்.

12அதற்கு மறுமொழியாக அவர், “ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?” என்றார்.

பிலயாமின் இரண்டாம் உரை

13பாலாக்கு அவரிடம், “வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு, எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்” என்றான்;

14அவ்வாறே, பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்; அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

15பிலயாம் பாலாக்கிடம், “நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்” என்றார்.

16ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்று சொன்னார்.

17அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், “ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?” என்று கேட்டான்.

18பிலயாம் திருஉரையாகக் கூறியது:

“பாலாக்கு, எழுந்து கேள்;

சிப்போர் மகனே,

எனக்குச் செவிகொடு.

19பொய் சொல்வதற்குக் கடவுள்

மனிதன் அல்லர்;

மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு

மனிதப் பிறவியும் அல்லர்.

அவர் சொல்லியதைச்

செய்யாமலிருப்பாரா?

அல்லது உரைத்ததை

நிறைவேற்றிமலிருப்பாரா?

20இதோ, நான் ஆசி கூறவே

ஒரு கட்டளை பெற்றேன்;

அவர் ஆசி பொழிந்துள்ளார்;

அதை என்னால் மாற்றியமைக்க

இயலாது.

21யாக்கோபில் தீங்கினை அவர்

கண்டதில்லை!

இஸ்ரயேலில் துயரத்தை அவர்

பார்த்ததுமில்லை!

ஆண்டவராம் கடவுள்

அவர்களோடிருக்கிறார்?

ஓர் அரசனின் பெருமுழக்கம்

அவர்களிடையே உண்டு.

22எகிப்திலிருந்து இறைவன் அவர்களை

வெளிக்கொணர்கின்றார்;

காண்டாமிருகத்தின் கொம்புகள்

அவர்களுக்கு உண்டு.

23யாக்கோபுக்கு எதிரான

மந்திர மாயம் ஏதுமில்லை.

இஸ்ரயேலுக்கு எதிரான

குறி கூறல் யாதுமில்லை;

யாக்கோபையும் இஸ்ரயேலையும்

பற்றி இப்போது சொல்லப்படுவது;

“எத்துணை அரியன

ஆற்றியுள்ளார் கடவுள்!

24இதோ, ஒரு மக்களினம்;

அது ஒரு பெண் சிங்கம் போன்று

எழும்புகிறது;

ஒரு சிங்கம் போன்று அது

தன்னை உயர்த்துகிறது.

இரையை விழுங்கி,

கொலையுண்டதின் இரத்தத்தைக்

குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.”

25பாலாக்கு பிலாயாமிடம், “ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்” என்றான்.

26ஆனால், பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார்.

பிலயாமின் மூன்றாம் உரை

27பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்” என்றான்.

28அங்ஙனமே, பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்; அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது.

29பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்” என்றார்.

30பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks