back to top
HomeTamilஎண்ணிக்கை அதிகாரம் - 21 - திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரம் – 21 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கானானியர்மேல் வெற்றி

1இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான்.

2உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று கூறியது.

3அவ்வாறே, ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே, அந்த இடத்தின் பெயர் ‘ஓர்மா’* என்று வழங்கியது.

வெண்கலப் பாம்பு

4ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர்.

5மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

6உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை* மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.

7அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார்.

8அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.

9அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

கோர் மலை முதல் மோவாபியர் பள்ளத்தாக்குவரை

10பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர்.

11அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர்.

12அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.

13அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்; அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது; அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும்.

14“ஆண்டவரின் போர்கள்” என்ற நூல் இவ்வாறு கூறுகிறது; “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும்,

15ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு”.

16அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். “மக்களை ஒன்றுகூட்டு; நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே.

17பின், இஸ்ரயேல் பாடிய பாடல்;

‘ஊறிப் பெருகிடு கிணறே!

அதைப் புகழ்ந்து பாடுங்கள்;

18‘இளவரசர்கள் செங்கோலால்

அகழ்ந்த கிணறு இதுவே;

மேன்மக்கள் கோல்கொண்டு

குடைந்த கிணறும் இதுவே’

பின், பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.

19மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்; நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர்.

20பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர்.

சீகோன், ஓகு மன்னர்களை வெல்லுதல்
(இச 2:26-3:11)

21இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது:

22“உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்; நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்; நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்.”

23ஆனால், தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை. அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்; யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான்.

24இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது; அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது.

25இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது; இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது.

26“எஸ்போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்; அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான்.

27எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்:

“எஸ்போனுக்கு வாருங்கள்;

அது கட்டப்படட்டும்;

சீகோன் நகர் நிறுவப்படட்டும்.

28நெருப்பு, எஸ்போனிலிருந்தும்

நெருப்புத் தழல் சீகோன்

நகரிலிருந்தும் சென்றது; அது

மோவாபிலுள்ள அர் நகரையும்

அர்னோன் மேடுகளிலுள்ள

தலைவர்களையும் விழுங்கிவிட்டது.

29மோவாபு! உனக்கு ஐயோ கேடு;

கெமொசின் மக்களே,

உங்களுக்கு முடிவு வந்துவிட்டது;

எமோரிய அரசன் சீகோனுக்கு

கெமோசின் காரணமாய் அவன்

புதல்வர் புறங்காட்டி ஓடினர்;

அவன் புதல்வியர்

சிறைக் கைதிகளாயினர்;

30எனவே எஸ்போன் முதல்

தீபோன் வரை அழிந்தது;

மேதபா வரையுள்ள நோபுபாக்குப்

பகுதியைப் பாழாக்கினோம்.”

31இவ்வாறு, இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று.

32பின்னர், யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்; அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர்.

33அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்; பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர்.

34ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்; நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய்” என்றார்.

35அங்ஙனமே, அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்; அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.


21:1 எண் 33:40.
21:4 இச 2:1.
21:5-6 1 கொரி 10:9.
21:9 2 அர 18:4; யோவா 3:14.
21:28-29 எரே 48:45-46.


21:3 எபிரேயத்தில், ‘அழிவு’ என்பது பொருள்.
21:6 எபிரேயத்தில், ‘சேராபின்கள்’ எனவும் பொருள்படும்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks