back to top
HomeTamilநெகேமியா அதிகாரம் - 9 - திருவிவிலியம்

நெகேமியா அதிகாரம் – 9 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர்.

2இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர்.

3ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.

4மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள்.

5பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, “என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்” என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. “எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி! போற்றி!”

மக்களின் மன்றாட்டு

6நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.

7ஆபிராமைத் தேர்ந்தெடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே!

8உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்!

9எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!

10பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர்! ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர்! இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்!

11அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்; எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்!

12நீர் அவர்களைப் பகலில் மேகத் தூணினால் வழி நடத்தினீர்! இரவில் நெருப்புத் தூணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்!

13நீர் சீனாய் மலை இறங்கினீர்! விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர்! நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்!

14புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்!

15அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர்! அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர்! நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர்.

16ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.

17அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய்க் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.

18அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, ‘உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்’ என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும்,

19நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் தூணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை இரவில் காட்டி வந்த நெருப்புத்தூணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.

20அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.

21நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.

22அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.

23அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.

24அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.

25எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.

26இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்; உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.

27அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரகத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர்.

28அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.

29உமது திருச்சட்டத்துக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்; வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.

30நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர்.

31ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை; ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.

32எங்கள் கடவுளே! மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே! அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.

33எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.

34எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை.

35உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.

36நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.

37எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.

ஒப்பந்தத்தில் மக்கள் கையொப்பமிடல்

38இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.


9:7 தொநூ 11:31; 12:1; 17:5.
9:8 தொநூ 15:18-21.
9:9 விப 3:7; 14:10-12.
9:10 விப 7:8-12:32.
9:11 விப 14:21-29; 15:4-5.
9:12 விப 13:21-22.
9:13-14 விப 19:18-23:33.
9:15 விப 16:4-5; 17:1-7; இச 1:21.
9:16-17 எண் 14:1-4; இச 1:33.
9:17 விப 34:6; எண் 14:18.
9:18 விப 32:1-4.
9:19-21 இச 8:2-4.
9:22 எண் 21:21-35.
9:23 தொநூ 15:5; 22:17; யோசு 3:14-17.
9:24 யோசு 11:23.
9:25 இச 6:10-11.
9:26-28 நீத 2:11-16.
9:29 லேவி 18:5.
9:30 2 அர 17:13-18; 2 குறி 36:15-16.
9:32 2 அர 15:19, 29; 17:3-6; எஸ்ரா 4:2,10.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks