back to top
HomeTamilநாகூம் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

நாகூம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

நாகூம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.

நினிவேயின்மீது ஆண்டவர் சினம் கொள்ளல்

2ஆண்டவர்

அநீதியைப் பொறாத இறைவன்;

பழிவாங்குபவர்;

ஆண்டவர் பழிவாங்குபவர்;

வெகுண்டெழுபவர்;

தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்;

தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.

3ஆண்டவர் விரைவில்

சினம் கொள்ளார்;

ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர்.

அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும்

பழிவாங்காமல் விடமாட்டார்.

சுழற்காற்றிலும் புயற்காற்றிலும்

அமைந்துள்ளது அவர் வழி;

மேகங்கள் அவர்தம்

காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!

4அவர் கடலை அதட்டி

வற்றச் செய்கின்றார்;

ஆறுகளையெல்லாம்

வற்றிப்போகச் செய்கின்றார்;

பாசானும் கர்மேலும்

காய்ந்து போகின்றன;

லெபனோனின் மலர்கள்

வாடிப்போகின்றன.

5அவர் முன்னிலையில்

மலைகள் அதிர்கின்றன;

குன்றுகள் கரைகின்றன;

நிலமும் உலகும்

அதில் குடியிருக்கும் அனைத்தும்

அவர் முன்னிலையில்

நடுநடுங்கின்றன.

6அவரது கடும் சினத்தை

எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்?

அவர் கோபத்தீயின் முன்

நிற்பவன் யார்?

தீயைப்போல் அவரது கோபம்

கொட்டுகின்றது;

பாறைகளும் அவர்முன்

தவிடு பொடியாகின்றன.

7ஆண்டவர் நல்லவர்;

துன்பநாளில் அவர்

காவலரண் ஆவார்;

அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை

அவர் அறிவார்.

8தம் எதிரிகளைப்

பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே

முற்றிலும் அழித்திடுவார்;

தம் பகைவர்களை

இருளுக்குள் விரட்டியடிப்பார்.

9ஆண்டவரைப்பற்றி

நீங்கள் நினைப்பது என்ன?

அவர் முற்றிலும் அழித்துவிடுவார்;

தீமை மீண்டும் தலைதூக்காது.

10குடிவெறியில்

மயங்கிக் கிடக்கும் அவர்கள்

பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும்

காய்ந்த சருகுபோலும்

முற்றிலும் எரிந்துபோவார்கள்.

11ஆண்டவருக்கு எதிராய்த்

திட்டம் தீட்டித்

தீய ஆலோசனைகளைக் கூறுபவன்

உன்னிடமிருந்து தோன்றினான்.

12ஆண்டவர் கூறுவது இதுவே:

“அவர்கள் வல்லவர்களாயினும்

பெரும் தொகையினராயினும்

வெட்டி வீழ்த்தப்பட்டு

அழிந்துவிடுவார்கள்;

உன்னை நான் இதுவரை

துன்புறுத்தியிருந்தாலும்

இனிமேல் உன்னைத்

துன்புறுத்தமாட்டேன்.

13இப்பொழுதே,

உன்மேல் இருக்கும்

அவன் நுகத்தை முறித்து

உன் கட்டுகளை நான்

அறுத்துவிடுவேன்.”

14ஆண்டவர் உன்னைப்பற்றி

இட்ட தீர்ப்பு இதுவே:

“உன் பெயரைத்தாங்கும்

வழிமரபே இல்லாமல் போகும்;

உன் தெய்வங்களின்

கோவிலில் உள்ள

செதுக்கிய சிலைகளையும்

வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன்.

நானே உனக்கு அங்குப்

புதை குழி வெட்டுவேன்;

ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.

15“வெற்றி! வெற்றி!” என்று முழங்கி

நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள்

மலைகளின்மேல் தென்படுகின்றன!

யூதாவே, உன் திருவிழாக்களைக்

கொண்டாடு!

உன் பொருத்தனைகளை

நிறைவேற்று!

ஏனெனில், தீயவன் உன் நடுவில்

இனி வரவே மாட்டான்;

அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.


1:1-3:19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.
1:15 எசா 52:7.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks