back to top
HomeTamilமாற்கு நற்செய்தி அதிகாரம் - 10 - திருவிவிலியம்

மாற்கு நற்செய்தி அதிகாரம் – 10 – திருவிவிலியம்

மாற்கு நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மண விலக்கு
(மத் 19:1-12)

1இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.

2பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

3அவர் அவர்களிடம் மறுமொழியாக,

“மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?”

என்று கேட்டார்.

4அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

5அதற்கு இயேசு அவர்களிடம்,

“உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

6படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,

‘ஆணும் பெண்ணுமாக

அவர்களைப் படைத்தார்.

7இதனால் கணவன்

தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்

தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.

8இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.

9

எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்”

என்றார்.

10பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

11இயேசு அவர்களை நோக்கி,

“தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.

12

தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்”

என்றார்.

சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13-15; லூக் 18:15-17)

13சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

14இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு,

“சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

15

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”

என்றார்.

16பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(மத் 19:16-30; லூக் 18:18-30)

17இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

18அதற்கு இயேசு அவரிடம்,

“நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.

19

உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?

‘கொலைசெய்யாதே;
விபசாரம் செய்யாதே;
களவு செய்யாதே;
பொய்ச்சான்று சொல்லாதே;
வஞ்சித்துப் பறிக்காதே;
உன் தாய் தந்தையை மதித்து நட’”

என்றார்.

20அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி,

“உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்”

என்று அவரிடம் கூறினார்.

22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

23இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம்,

“செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்”

என்றார்.

24சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து,

“பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.

25

அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது”

என்றார்.

26சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

27இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,

“மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்”

என்றார்.

28அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

29அதற்கு இயேசு,

“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்

30இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

31

முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்”

என்றார்.

இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்
(மத் 20:17-19; லூக் 18:31-34)

32அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

33அவர்,

“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்;

34

அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்”

என்று அவர்களிடம் கூறினார்.

செபதேயுவின் மக்களது வேண்டுகோள்
(மத் 20:20-28)

35செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள்.

36அவர் அவர்களிடம்,

“நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?”

என்று கேட்டார்.

37அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

38இயேசுவோ அவர்களிடம்,

“நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?”

என்று கேட்டார்.

39அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி,

“நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.

40

ஆனால், என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்”

என்று கூறினார்.

41இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.

42இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம்,

“பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.

43ஆனால், உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

44உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.

45

ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்”

என்று கூறினார்.

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
(மத் 20:29-34; லூக் 18:35-43)

46இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார்.

48பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

49இயேசு நின்று,

“அவரைக் கூப்பிடுங்கள்”

என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.

50அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.

51இயேசு அவரைப் பார்த்து,

“உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?”

என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார்.

52இயேசு அவரிடம்,

“நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”

என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


10:4 இச 24:1-4; மத் 5:31.
10:6 தொநூ 1:27; 5:2.
10:7-8 தொநூ 2:24.
10:11-12 மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 10:11.
10:15 மத் 18:3.
10:19 விப 20:12-16; இச 5:16-20; 24:14.
10:31 மத் 20:16; லூக் 13:30.
10:32 யோவா 11:16.
10:38 லூக் 12:50.
10:42-45 மத் 20:24-28; லூக் 22:24-27.


10:45 இதன் கிரேக்கச் சொல்லை சிலர் ‘எல்லாருடைய’ என மொழிபெயர்க்கின்றனர்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks