back to top
HomeTamilலேவியர் அதிகாரம் - 5 - திருவிவிலியம்

லேவியர் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள்

1ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.

2ஒருவர் தீட்டான எதையும் — செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத் தீட்டான கால்நடையையோ, செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ — தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே. அவர் குற்றவாளி ஆவார்.

3மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.

4தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.

5மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,

6பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.

7அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,

8அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.

9பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவம் போக்கும் பலி.

10இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும். அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவரும் மன்னிப்புப் பெறுவார்.

11இரண்டு காட்டுப் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால் குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம் தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி* அளவு மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக. அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது. ஏனெனில், அது பாவம் போக்கும் பலி.

12அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும். குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இது பாவம் போக்கும் பலி.

13இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக. அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார். எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.

பதிலாகச் செலுத்தவேண்டிய காணிக்கைகள்

14ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

15ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக. அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.

16அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால்,ஈட்டுத் தொகையோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்கவேண்டும். அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும். குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்பொழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.

17ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத்திற்கு உள்ளானால், அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.

18அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப, பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார். அவர் அறியாமல் செய்த பிழைக்காகக் குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார். அது அவருக்கு மன்னிக்கப்படும்.

19அது குற்றப்பழி நீக்கும் பலி. அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.


5:11 * ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks