back to top
HomeTamilலேவியர் அதிகாரம் - 26 - திருவிவிலியம்

லேவியர் அதிகாரம் – 26 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கீழ்ப்படிதலுக்கான பலன்
(இச 7:12-24; 28:1-14)

1நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

2ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்!

3நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால்,

4ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்.

5கதிர் அறுப்பு திராட்சைப்பழ அறுவடைவரை இருக்கும். பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்; நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள்.

6நாட்டிற்கு அமைதி அருள்வேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.

7உங்கள் எதிரிகளைத் துரத்தியடிப்பீர்கள்; அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.

8உங்களில் ஐந்து பேர் நூறுபேரையும், நூறுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்; உங்கள் எதிரிகள் உங்கள் முன்வாளால் வெட்டுண்டு அழிவர்.

9நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருந்தும் என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன்.

10சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்; புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும்.

11என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை.

12உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!

13நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாய் இராதபடிக்கு நான் உங்களை அவர்கள் நாட்டிலிருந்து புறப்படச்செய்தேன். உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

கீழ்ப்படியாமைக்கான தண்டனை
(இச 28:15-68)

14நீங்கள் என் சொல்லைக் கேளாமல், கட்டளைக்கு ஏற்ப நடக்காமல்,

15நியமங்களைத் தள்ளிவிட்டு, நீங்கள் என் கட்டளைகளை வெறுத்து, சட்டங்களை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை முறித்துவிட்டால்,

16திகிலையும் என்புருக்கி நோயையும் காய்ச்சலையும் வரப்பண்ணுவேன். அவை உங்கள் கண்களைப் பூக்கச்செய்து உயிரை உறிஞ்சும். நீங்கள் பயனில்லாமல் விதைவிதைப்பீர்கள்; எதிரிகள் பலனைத் தின்பார்கள்.

17உங்கள் எதிரிகள் முன்னிலையில் முறியடிக்கப்படுமாறு எனது முகத்தை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். உங்கள் பகைவர் உங்களை ஆள்வர். யாரும் துரத்தாமலே நீங்கள் ஓடுவீர்கள்.

18இதன் பின்னரும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையெனில், நான் உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன்.

19உங்கள் முரட்டுப் பெருமையை அழித்து வானத்தை இரும்பைப் போன்றும் நிலத்தை வெண்கலத்தைப்போன்றும் இறுகச் செய்வேன்.

20உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்; நாடு தன்பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா.

21நீங்கள் என் சொல்லைக் கேட்க மனமற்று, எனக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் தவறுகளுக்குத் தக்க, ஏழு மடங்கு துன்பத்தை உங்கள் மீது வரச்செய்வேன்.

22உங்களுக்குள் காட்டு விலங்குகளை வரவிடுவேன். அவை உங்கள் பிள்ளைகளை அழிக்கும். உங்கள் ஆடுமாடுகளை அழித்து, உங்களைக் குறைந்துபோகச் செய்யும். உங்கள் பாதைகள் பயன்படுத்துவோரில்லாமல் பாழாகும்.

23அப்படியும், இந்தத் தண்டனையால் திருந்தாமல், எனக்கு எதிராக நீங்கள் நடந்தால்,

24நான் உங்களுக்கு எதிராக நின்று, உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு தண்டனை வரச்செய்வேன்.

25உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்; எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன்.

26உணவு என்னும் ஆதரவை உங்களிடமிருந்து அகற்றிவிடுவேன். பத்துப்பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுட்டு அதைச் சமநிறையாகப் பங்கிட்டுப் கொடுப்பர். நீங்கள் உண்டும் நிறைவடையமாட்டீர்கள்.

27இதற்குப்பின்னும், நீங்கள் என் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை எனில்,

28நான் பெரும் கோபம் கொண்டு உங்களை எதிர்த்து உங்கள் குற்றங்களுக்காக ஏழுமடங்கு தண்டிப்பேன்.

29உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள்.

30நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன். என் உள்ளம் உங்களை வெறுக்கும்.

31உங்கள் நகர்கள் பாலை நிலமும், உங்கள் புனித இடங்கள் பாழ்நிலமும் ஆகும். உங்கள் பலிகளின் நறுமணம் எனக்கு உவப்பாய் இராது.

32உங்கள் எதிரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் அவர்கள் குடியிருக்கும் உங்கள் நாட்டைப் பாழாக்குவேன்.

33உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன். உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும்.

34நாடு பாழாய்க் கிடக்கும். அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும். அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும். அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.

35நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும்.

36உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன். காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும். வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.

37வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.

38வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள். உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.

39உங்களுள் எஞ்சியிருப்போர் எதிரிகளின் நாடுகளில் தங்கள் குற்றங்களாலும் தங்கள் மூதாதையரின் குற்றங்களாலும் சோர்வுற்று

40எனக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களும், அவர்கள் மூதாதையர் செய்த குற்றங்களும்,

41நான் அவர்களுக்கு எதிராகமாறி அவர்களை அவர்களின் எதிரிகளின் நாட்டிற்கு அனுப்பச்செய்தன. அதனை அவர்கள் அறிக்கையிட்டு, அப்போது அவர்கள் விருத்தசேதனம் அற்ற இதயத்தைத் தாழ்த்தி, குற்றத்திற்குக் கழுவாய் தேடினால்,

42நான் யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் நினைவு கூர்வேன்; நாட்டையும் நினைவுகூர்வேன்.

43அவர்களின் செயலால் வெறுமையாய் விடப்பட்டு, பாழாய்ப்போன நிலம் தனது ஓய்வாண்டுகளை நிறைவாய் அனுபவிக்கும்; என் கட்டளைகளை ஏற்காததாலும் நியமங்களை வெறுத்ததாலும் தங்கள் தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் கழுவாய் தேடுவர்.

44ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன். ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்!

45நான் அவர்களுடைய கடவுளாகிய வேற்றினத்தார் கண்முன்னே எகிப்திலிருந்து அவர்களின் மூதாதையரை அழைத்து வந்து அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூர்வேன், நானே ஆண்டவர்”.

46ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே!


26:1 விப 20:4; லேவி 19:4; இச 5:8; 16:21-22; 27:1.
26:3-5 இச 11:13-15; 28:1-14.
26:12 2 கொரி 6:16.
26:42 தொநூ 17:7-8; 26:3-4; 28:13-14.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks