back to top
HomeTamilபுலம்பல் அதிகாரம் - 3 - திருவிவிலியம்

புலம்பல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

புலம்பல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும்

1ஆண்டவரது சினத்தின் கோலால்

வேதனை அனுபவித்த ஒருவன் நான்!

2அவர் என்னைத் துரத்தியடித்து,

ஒளியினுள் அன்று,

இருளினுள் நடக்கச் செய்தார்!

3உண்மையில் அவர் என்மீது

தம் கையை ஓங்குகிறார்!

நாள் முழுதும் ஓங்குகிறார்!

மீண்டும் மீண்டும்

என்னை வதைக்கிறார்!

4அவர் என் சதையையும் தோலையும்

சிதைத்துவிட்டார்!

என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!

5அவர் கசப்பாலும் துயராலும்

என்னை முற்றுகையிட்டு

வளைத்துக்கொண்டார்!

6பண்டைக் காலத்தில் இறந்தோர் போல,

இருள் சூழ்ந்த இடத்தில்

அவர் என்னை வாழச் செய்தார்!

7நான் தப்பிச் செல்ல இயலாதவாறு

என்னைச் சுற்றிலும்

அவர் மதில் எழுப்பினார்!

பளுவான தளைகளால்

என்னைக் கட்டினார்!

8துணை வேண்டி

நான் கூக்குரல் எழுப்பியபோதும்,

அவர் என் மன்றாட்டைக் கேட்க

மறுத்துவிட்டார்!

9செதுக்கிய கற்களால் என் வழிகளில்

தடைச் சுவர் எழுப்பினார்!

என் பாதைகளைக்

கோணாலாக்கினார்!

10பதுங்கியிருக்கும் கரடி போன்றும்

மறைந்திருக்கும் சிங்கம் போன்றும்,

அவர் எனக்கு ஆனார்!

11என் வழிகளினின்று

இழுத்துச் சென்று,

என்னைப் பீறிக் கிழித்தார்!

என்னை முற்றிலும் பாழாக்கினார்!

12அவர் தமது வில்லை நாணேற்றினார்!

அவர் தமது அம்புக்கு

என்னை இலக்கு ஆக்கினார்!

13அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை

என் நெஞ்சுள் பாய்ச்சினார்!

14நாள் முழுதும் நான்

என் மக்கள் அனைவரின்

நகைப்புக்கு உள்ளானேன்!

அவர்களது வசைப்பாடலின்

பொருள் ஆனேன்!

15அவர் கசப்புணவால்

என்னை நிரப்பினார்!

எட்டிக் காடியால்

எனக்கு வெறியூட்டினார்!

16கற்களால் என் பற்களை

நொறுக்கினார்!

என்னைப் புழுதியில் போட்டு

அவர் மிதித்தார்!

17அமைதியை நான் இழக்கச் செய்தீர்!

நலமென்பதையே

நான் மறந்துவிட்டேன்!

18‘என் வலிமையும் ஆண்டவர்மீது

நான் கொண்டிருந்த நம்பிக்கையும்

மறைந்துபோயின!’ என்று

நான் சொல்லிக் கொண்டேன்.

19என் துயரத்தையும் அலைச்சலையும்,

எட்டிக் காடியையும் கசப்பையும்

நினைத்தருளும்!

20அதை நினைந்து நினைந்து

என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!

21இதை என் நினைவுக்குக்

கொண்டு வருகின்றேன்; எனவே

நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

22‘ஆண்டவரின் பேரன்பு

முடிவுறவில்லை!

அவரது இரக்கம்

தீர்ந்துபோகவில்லை!

23காலைதோறும் அவை

புதுப்பிக்கப்படுகின்றன!

நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’

24‘ஆண்டவரே என் பங்கு’ என்று

என் மனம் சொல்கின்றது!

எனவே, நான் அவரில்

நம்பிக்கை கொள்கின்றேன்.

25ஆண்டவரில்

நம்பிக்கை வைப்போர்க்கும்,

அவரைத் தேடுவோர்க்கும்

அவர் நல்லவர்!

26ஆண்டவர் அருளும் மீட்புக்காக

அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

27இளமையில் நுகம் சுமப்பது

மனிதருக்கு நலமானது!

28அவரே அதை

அவர்கள்மேல் வைத்தார்;

எனவே, தனிமையில்

அமைதியாய் அவர்கள் அமரட்டும்.

29அவர்களின் வாய்

புழுதியைக் கவ்வட்டும்;

நம்பிக்கைக்கு இன்னும்

இடம் இருக்கலாம்!

30தங்களை அறைபவர்களுக்குக்

கன்னத்தைக் காட்டட்டும்!

அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!

31என் தலைவர் என்றுமே

கைவிட மாட்டார்!

32அவர் வருத்தினாலும்,

தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.

33மனமார அவர்

மானிடரை வருத்துவதுமில்லை;

துன்புறுத்துவதுமில்லை.

34நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும்

காலால் மிதிக்கப்படுவதையோ,

35உன்னதரின் திருமுன் மனிதருக்கு

நீதி மறுக்கப்படுவதையோ,

36வழக்கில் ஒருவர்

வஞ்சிக்கப்படுவதையோ,

என் தலைவர் காணாது இருப்பாரோ?

37என் தலைவர் கட்டளையிடாமல்,

யார் தாம் சொல்லியதை

நிறைவேற்றக்கூடும்?

38நன்மையும் தீமையும் புறப்படுவது,

உன்னதரின் வாயினின்று அன்றோ?

39உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்?

மானிடர் அடைவது

தம் பாவத்தின் விளைவை அன்றோ?

40நம் வழிகளை ஆய்ந்தறிவோம்!

ஆண்டவரிடம் திரும்புவோம்!

41விண்ணக இறைவனை நோக்கி

நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!

42நாங்கள் குற்றம் புரிந்து

கலகம் செய்தோம்!

நீரோ எம்மை மன்னிக்கவில்லை!

43நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு

எம்மைப் பின்தொடர்ந்தீர்!

இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?

44எங்கள் மன்றாட்டு

உம்மை வந்தடையாதபடி,

மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!

45மக்களினங்கள் இடையே எம்மை

குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!

46எங்கள் பகைவர் அனைவரும்

எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!

47திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன!

சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!

48என் மக்களாகிய மகளின்

அழிவைக் கண்டு என்

கண்கள் குளமாயின!

49வற்றாத ஓடையென என் கண்கள்

நீர் சொரிகின்றன;

50ஆண்டவர் வானினின்று

கண்ணோக்கும் வரை,

ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!

51என் நகரின் புதல்வியர்

அனைவர் நிலை கண்டு,

என் உள்ளம் புலம்புகின்றது!

52காரணமின்றி என் பகைவர்,

பறவையை வேட்டையாடுவது போன்று,

என்னை வேட்டையாடினர்!

53உயிரோடு என்னைக் குழியில் தள்ளி,

என்மேல் கற்களை எறிந்தார்கள்!

54வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று!

‘நான் தொலைந்தேன்’ என்றேன்.

55படுகுழியினின்று ஆண்டவரே!

உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.

56என் குரலை நீர் கேட்டீர்;

என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும்

உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!

57உம்மை நோக்கி நான்

கூவியழைத்த நாளில்,

என்னை அணுகி,

‘அஞ்சாதே’ என்றீர்!

58என் தலைவரே!

என் பொருட்டு வாதாடினீர்!

என் உயிரை மீட்டருளினீர்!

59ஆண்டவரே! எனக்கு

இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்!

எனக்கு நீதி வழங்கும்!

60அவர்களின் பழிவாங்கும்

திட்டத்தையும்

எனக்கு எதிரான அவர்களின்

சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!

61ஆண்டவரே!

அவர்களின் வசைமொழிகளையும்

எனக்கு எதிரான அவர்களின்

சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!

62என் பகைவர் நாள் முழுவதும்

எனக்கெதிராக, முணுமுணுத்துத்

திட்டமிடுகின்றனர்.

63பாரும்! அவர்கள்

அமர்ந்தாலும் எழுந்தாலும்

என்னைப் பற்றியே

வசைபாடுகிறார்கள்!

64ஆண்டவரே!

அவர்களின் செயல்களுக்கேற்ப

அவர்களுக்குக்

கைம்மாறு அளித்தருளும்!

65நீர் அவர்கள் மனதைக்

கடினப்படுத்தும்!

உம் சாபம் அவர்கள்மேல்

விழச் செய்யும்!

66ஆண்டவரே, சினம் கொண்டு

அவர்களைப் பின்தொடரும்!

வானத்தின்கீழ் இல்லாதவாறு

அவர்களை அழித்தொழியும்!

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks