back to top
HomeTamilயோசுவா அதிகாரம் - 10 - திருவிவிலியம்

யோசுவா அதிகாரம் – 10 – திருவிவிலியம்

யோசுவா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல்

1யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான்.

2அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது.

3எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு

4“எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில், அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது” என்று சொல்லியனுப்பினான்.

5அவ்வாறே, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.

6கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: “உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.”

7எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார்.

8ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார்.

9யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார்.

10ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்; அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார்.

11அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம்.

12கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன்,

“கதிரவனே! கிபயோனில் நில்!

நிலவே! அய்யலோன்

பள்ளத்தாக்கில் நில்” என்றார்.

13அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா?

‘கதிரவன் நடுவானில் நின்றது.

ஒரு நாள் முழுவதும் அது

இறங்குவதற்கு விரையவில்லை’.

14ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.

15யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.

16அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்.

17அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

18யோசுவா, “குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்.

19நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார்.

20யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள்.

21மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.

22யோசுவா, “குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.

23அவர்கள் அவ்வாறே செய்தனர்; எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

24அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், “அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்.

25யோசுவா அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார்.

26அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்.

27கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன.

28யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார். அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார். அவர்களைக் கொன்று அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார்.

29யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்.

30ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்.

31யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள்.

32ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்; அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார்.

33கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார்.

34யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர்.

35அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர்.

36யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர்.

37அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்; அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார்.

38யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினர்.

39அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.

40யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார். நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்; எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார்.

41யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார்.

42யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார்.

43யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.


10:13 2 சாமு 1:18.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks