back to top
HomeTamilயோபு அதிகாரம் - 38 - திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 38 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆண்டவரின் முதல் சொற்பொழிவு

1ஆண்டவர் சூறாவளியினின்று

யோபுக்கு அருளிய பதில்:

2அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை

இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?

3வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;

வினவுவேன் உன்னிடம்,

விடை எனக்களிப்பாய்.

4மண்ணகத்திற்கு நான்

கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?

உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?

5அதற்கு அளவு குறித்தவர் யார்?

உனக்குத்தான் தெரியுமே!

அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?

6எதன்மேல் அதன் தூண்கள்

ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்

மூலைக் கல்லை நாட்டியவர்?

7அப்போது வைகறை விண்மீன்கள்

ஒன்றிணைந்து பாடின!

கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!

8கருப்பையினின்று கடல்

உடைப்பெடுத்து ஓடியபொழுது

அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?

9மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,

காரிருளைப் பொதிதுணியாக்கி,

10எல்லைகளை நான் அதற்குக் குறித்து

கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி

11‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”

என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?

12உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்

கட்டளையிட்டதுண்டா?

வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?

13இவ்வாறு, அது வையக விளிம்பைத்

தொட்டிழுத்து, பொல்லாதவரை

அதனுளிருந்து உதறித்தள்ளுமே!

14முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்

மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

15அப்போது, கொடியவரிடமிருந்து

ஒளி பறிக்கப்படும்;

அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.

16கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?

17சாவின் வாயில்கள்

உனக்குக் காட்டப்பட்டனவோ?

இருள் உலகின் கதவுகளைக்

கண்டதுண்டோ நீ?

18அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?

அறிவிப்பாய் அதிலுள்ள

அனைத்தையும் அறிந்திருந்தால்!

19ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!

இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?

20அதன் எல்லைக்கு

அதனை அழைத்துப் போவாயோ?

அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!

21ஆம், அறிவாய்;

அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;

ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

22உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?

23இடுக்கண் வேளைக்கு எனவும்

கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்

அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.

24ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?

கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?

25வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?

இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?

26மனிதர் வாழா மண்ணிலும்

மாந்தர் குடியிராப் பாலையிலும்

மழை பெய்வித்துப்

27பாழ்வெளிக்கும் வறண்ட

நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்

பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?

28மழைக்குத் தந்தை உண்டோ?

பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?

29பனிக்கட்டி யாருடைய உதரத்தில்

தோன்றுகின்றது? வானின் மூடுபனியை

ஈன்றெடுப்பவர் யார்?

30கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;

ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.

31கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?

மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?

32குறித்த காலத்தில்

விடிவெள்ளியைக் கொணர்வாயோ?

வடதிசை விண்மீன் குழுவுக்கு

வழி காட்டுவாயோ?

33வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?

அதன் ஒழுங்கை நானிலத்தில்

நிலைநாட்டிடுவாயோ?

34முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?

தண்ணீர்ப் பெருக்கு

உன்னை மூடச் செய்வாயோ?

35‘புறப்படுக’ என மின்னலுக்கு

ஆணையிடுவாயோ?

‘இதோ! உள்ளோம்’ என

அவை உனக்கு இயம்புமோ?

36நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?

சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?

37ஞானத்தால் முகில்களை

எண்ணக் கூடியவர் யார்?

வானத்தின் நீர்க்குடங்களைக்

கவிழ்ப்பவர் யார்?

38துகள்களைச் சேர்த்துக்

கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை

ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?

39பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?

அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?

40குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,

குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.

41காக்கைக் குஞ்சுகள்

இறைவனை நோக்கிக் கரையும் போது,

அவை உணவின்றி ஏங்கும்போது,

காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?


38:8-11 எரே 5:22.
38:31 யோபு 9:9; ஆமோ 5:8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks