back to top
HomeTamilயோபு அதிகாரம் - 22 - திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 22 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கடவுளோடு ஒப்புரவாகும் வழி
(22:1-27:23)

1பின்னர் தேமானியனான எலிப்பாசு

பேசத் தொடங்கினான்:

2மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?

மதிநுட்பம் உடையவரால்

அவருக்குப் பயன் உண்டா?

3நீர் நேர்மையாக இருப்பது

எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?

நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது

அவர்க்கு நன்மை பயக்குமா?

4நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா

அவர் உம்மைக் கண்டிக்கிறார்?

அதனை முன்னிட்டா

உம்மைத் தீர்ப்பிடுகிறார்?

5உமது தீமை பெரிதல்லவா?

உமது கொடுமைக்கு முடிவில்லையா?

6ஏனெனில், அற்பமானவற்றுக்கும்

உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;

ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!

7தாகமுள்ளோர்க்குக்

குடிக்கத் தண்ணீர் தரவில்லை;

பசித்தோர்க்கு உணவு கொடுக்க

முன்வரவில்லை.

8வலிய மனிதராகிய உமக்கு

வையகம் சொந்தமாயிற்று;.

உம் தயவு பெற்றவர்க்கே

அது குடியிருப்பாயிற்று.

9விதவைகளை நீர்

வெறுங்கையராய் விரட்டினீர்;

.அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

10ஆகையால்,

கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;

கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.

11நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;

நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.

12உயரத்தே விண்ணகத்தில்

கடவுள் இல்லையா?

வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!

அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!

13ஆனால், நீர் சொல்கின்றீர்;

‘இறைவனுக்கு என்ன தெரியும்?

கார்முகிலை ஊடுருவிப் பார்த்து

அவரால் தீர்ப்பிட முடியுமா?

14அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;

அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.

15பாதகர் சென்ற பழைய நெறியில்

நீரும் செல்ல விழைகின்றீரோ!

16நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;

அவர்கள் அடித்தளத்தை

வெள்ளம் அடித்துச் சென்றது.

17அவர்கள் இறைவனிடம்,

‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்

எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.

18இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை

நம்மையினால் நிரப்பினார்; .

எனினும், தீயவரின் திட்டம்

எனக்குத் தொலைவாயிருப்பதாக!

19நேர்மையுள்ளோர் அதைக் கண்டு

மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்

அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;

20‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;

அவர்களின் சேமிப்பு

தீயால் விழுங்கப்பட்டது’

என்கின்றனர்.

21இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;

அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.

22அவர் வாயினின்று அறிவுரை பெறுக;

அவர்தம் மொழிகளை

உம் நெஞ்சில் பொறித்திடுக;

23நீர் எல்லாம் வல்லவரிடம்

திரும்பி வருவீராகில்,

நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை

உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!

24பொன்னைப் புழுதியிலே எறிந்து,

ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!

25எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,

வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

26அப்போது எல்லாம் வல்லவரில்

நீர் நம்பிக்கை கொள்வீர்.

கடவுளைப் பார்த்து

உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.

27நீர் அவரிடம் மன்றாடுவீர்;

அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.

28நீர் நினைப்பது கைகூடும்;

உம் வழிகள் ஒளிமயமாகும்.

29ஏனெனில், அவர் செருக்குற்றோரின்

ஆணவத்தை அழிக்கின்றார்;

தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.

30குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;

அவர்கள் உம் கைகளின்

தூய்மையால் மீட்கப்படுவர்.


22:2-3 யோபு 35:6-8.


22:29 ‘ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்படும்போது,அவர்களை உயர்த்தும், என்பீர்; அவரும் அவர்களைத் தாழ்நிலையினின்று விடுவிப்பார்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks