back to top
HomeTamilஎரேமியா அதிகாரம் - 9 - திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 9 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்

என் கண்கள் கண்ணீரின்

ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?

அப்படியானால், என் மகளாம்

மக்களுள் கொலையுண்டோருக்காக

இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!

யூதாவின் தீய வாழ்வு

2பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று

எனக்கு இருக்கக் கூடாதா?

நான் மக்களைப் புறக்கணித்து

அவர்களிடமிருந்து சென்று விடலாமே!

ஏனெனில், அவர்கள் யாவரும்

விபசாரிகள்,

நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.

3பொய்பேசத் தங்கள் நாவை

வில்லைப்போல்

அவர்கள் வளைக்கின்றனர்;

உண்மைக்காக நாட்டில்

யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;

அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே

சென்று கொண்டிருக்கிறார்கள்;

என்னையோ அவர்கள்

அறிந்து கொள்ளவில்லை,

என்கிறார் ஆண்டவர்.

4ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப்

பொறுத்தவரை

எச்சரிக்கையாய் இருக்கட்டும்.

எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.

ஏனெனில், எல்லா உறவினரும்

ஏமாற்றுவர் என்பது உறுதி;

அடுத்திருப்பவர் அனைவரும்

புறணி பேசுகின்றனர்;

5எல்லாரும் அடுத்திருப்பவரை

ஏமாற்றுகின்றனர்;

யாருமே உண்மை பேசுவதில்லை;

பொய் பேசத் தங்கள் நாவைப்

பழக்கியுள்ளார்கள்;

குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.

6நீயோ வஞ்சனை செய்வார் நடுவில்

வாழ்கின்றாய்;

தங்கள் வஞ்சனையின் காரணமாக

என்னை அவர்கள்

அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,

என்கிறார் ஆண்டவர்.

7எனவே, படைகளின் ஆண்டவர்

இவ்வாறு கூறுகின்றார்;

நான் அவர்களைப் புடமிடுவேன்;

பரிசோதிப்பேன்;

என் மகளாகிய மக்களுக்கு நான்

வேறு என்னதான் செய்யமுடியும்?

8அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;

அது பேசுவது வஞ்சனை;

எல்லாரும் தம் வாயால்

அடுத்திருப்பவர்களோடு

சமாதானமாய்ப் பேசுகின்றனர்;

உள்ளத்திலோ அவர்களுக்குக்

குழி பறிக்கின்றனர்.

9இவற்றின் பொருட்டு

நான் அவர்களைத்

தண்டியாமல் விடுவேனோ?

இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை

நான் பழிவாங்காமல் இருப்பேனோ?

என்கிறார் ஆண்டவர்.

சீயோனில் புலம்பல்

10மலைகளைக் குறித்து

அழுது புலம்புவோம்;

பாழ்வெளி மேய்ச்சல்

நிலத்தின் பொருட்டு

ஒப்பாரி வைப்போம்;

ஏனெனில் அனைத்தும்

தீய்ந்து போயின;

அவை வழியாய்ச் செல்வோர்

யாருமில்லை;

கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;

வானத்துப் பறவைகள் முதல்

விலங்குகள் வரை அனைத்துமே

ஓடி மறைந்து விட்டன.

11எருசலேமை அழித்துக்

கற்குவியலாக்குவேன்;

அதனைக் குள்ளநரிகளின்

வளையாக்குவேன்;

யூதா நகர்களை யாரும் வாழாப்

பாழ்வெளியாக்குவேன்.

12இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?

13ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை.

14மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்; தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.

15ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.

16அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.

17படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;

இதோ! கேளுங்கள்.

ஒப்பாரி வைக்கும் பெண்களை

வரச்சொல்லுங்கள்;

அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்

சொல்லியனுப்புங்கள்.

18அவர்கள் விரைந்து வந்து

நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;

நம் கண்கள் நீர் பொழியட்டும்;

நம் இமைகள் நீர் சொரியட்டும்.

19ஏனெனில், சீயோனிலிருந்து

புலம்பல் கேட்கின்றது;

“நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;

நம் மானமெல்லாம் போயிற்றே;

நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.

நம் குடியிருப்புகள்

தகர்க்கப்பட்டனவே.”

20பெண்டிரே!

ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;

உங்கள் செவிகள் அவர்தம்

வாய்மொழியை ஏற்கட்டும்;

உங்கள் புதல்வியருக்குப்

புலம்பக் கற்றுக்கொடுங்கள்.

ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு

ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.

21ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்

வந்துவிட்டது;

நம் அரண்களுக்குள்ளும்

நுழைந்து விட்டது;

தெருக்களில் சிறுவர்களையும்

பொதுவிடங்களில் இளைஞர்களையும்

வீழ்த்திவிட்டது.

22ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்

எனச் சொல்;

மனிதரின் பிணங்கள் சாணம்போல்

வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;

அறுவடை செய்வோனுக்குப் பின்னால்

விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.

ஆண்டவரை அறிதலே பெருமை

23ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.

24பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.

25இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.

26எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்; ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்; இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.


9:24 1 கொரி 1:31; 2 கொரி 10:17.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks