back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 41 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 41 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இஸ்ரயேலுக்கு ஆண்டவரின் உறுதிமொழி

1தீவுகளே, என் திருமுன்னே

மௌனமாயிருங்கள்;

மக்களினங்கள் தம் ஆற்றலைப்

புதுப்பிப்பார்களாக!

அருகில் வந்து பேசுவார்களாக!

நீதித்தீர்ப்புக்காக

நாம் ஒருங்கே கூடிவருவோமாக!

2சென்றவிடமெல்லாம் சிறப்புறும்

நேர்மையாளனைக்

கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?

மக்களினங்களை

அவனிடம் கையளித்து

அரசர்களை

அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?

அவன் வாள் அவர்களைப்

புழுதியாக்குகிறது;

அவன் வில் அவர்களைப்

பதர்போல் பறக்கச் செய்கிறது.

3அவன் அவர்களைத்

துரத்திச் செல்கின்றான்;

எதிர்ப்பு எதுவுமின்றி

முன்னேறுகின்றான்;

பாதை வழியே

காலடி படாது செல்கின்றான்.

4இவற்றைச்செய்து முடித்தவர் யார்?

தொடக்கத்திலிருந்தே

தலைமுறைகளை அழைத்தவரன்றோ!

ஆண்டவராகிய நானே முதலானவர்!

முடிவானவற்றுடன்

இருக்கப் போவதும் நானே!

5தீவு நாட்டினர்

அதைப் பார்த்து அஞ்சினர்;

உலகின் எல்லைகளில் வாழ்வோர்

நடுநடுங்கினர்; எனவே

அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.

6ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு

உதவி செய்கின்றார்;

தம் அடுத்தவரிடம்,

‘திடன்கொள்’ என்கின்றார்.

7கைவினைஞர் பொற்கொல்லருக்கு

ஊக்கமூட்டுகின்றார்;

சுத்தியலால் தட்டுபவர்

சம்மட்டியால் அடிப்பவரிடம்,

பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’

என்று சொல்லி

உற்சாகப்படுத்துகின்றார்;

அசையாதபடி ஆணிகளால்

அதை இறுக்குகின்றார்.

8நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே!

நான் தெரிந்தெடுத்த யாக்கோபே!

என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!

9உலகின் எல்லைகளினின்று

உன்னை அழைத்து வந்தேன்;

தொலைநாடுகளினின்று

உன்னை அழைத்தேன்;

‘நீ என் அடியவன்;

நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;

உன்னை நான் தள்ளிவிடவில்லை’

என்று சொன்னேன்.

10அஞ்சாதே,

நான் உன்னுடன் இருக்கிறேன்;

கலங்காதே, நான் உன் கடவுள்,

நான் உனக்கு வலிமை அளிப்பேன்;

உதவி செய்வேன்;

என் நீதியின் வலக்கரத்தால்

உன்னைத் தாங்குவேன்.

11உனக்கெதிராய்

வெகுண்டெழுவோர் அனைவரும்

மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;

உன்னை எதிர்த்து வழக்காடுவோர்

இல்லாதொழிவர்.

12உன்னை எதிர்த்துப் போராடியோரை

நீ தேடுவாய்; ஆனால்

அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;

உன்னை எதிர்த்துப் போரிட்டோர்

ஒழிந்து போவர்.

13ஏனெனில் நானே

உன் கடவுளாகிய ஆண்டவர்;

உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,

“அஞ்சாதே, உனக்குத்

துணையாய் இருப்பேன்” என்று

உன்னிடம் சொல்பவரும் நானே.

14“யாக்கோபு என்னும் புழுவே,

இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,

அஞ்சாதிரு; நான் உனக்குத்

துணையாய் இருப்பேன்,”

என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

15இதோ, நான் உன்னைப்

புதிய கூர்மையான

போரடிக்கும் கருவியாக்குவேன்.

நீ மலைகளைப்

போரடித்து நொறுக்குவாய்;

குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.

16அவற்றைத் தூற்றுவாய்,

காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;

புயல் அவற்றைச் சிதறடிக்கும்;

ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;

இஸ்ரயேலின் தூயவரில்

மேன்மை அடைவாய்.

17ஏழைகளும் வறியோரும்

நீரைத் தேடுகின்றனர்;

அது கிடைக்கவில்லை.

அவர்கள் தாகத்தால்

நாவறண்டு போகின்றனர்;

ஆண்டவராகிய நான்

அவர்களுக்குப் பதிலளிப்பேன்;

இஸ்ரயேலின் கடவுளாகிய நான்

அவர்களைக் கைவிடமாட்டேன்.

18பொட்டல் மேடுகளைப் பிளந்து

ஆறுகள் தோன்றச் செய்வேன்;

பள்ளத்தாக்குகளில்

நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;

பாலைநிலத்தை

நீர்த் தடாகங்களாகவும்

வறண்ட நிலத்தை

நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

19பாலைநிலத்தில்

கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;

சித்திம் மரம், மிருதுச் செடி,

ஒலிவ மரம் ஆகியன

தோன்றச் செய்வேன்;

பாழ்நிலத்தில்

தேவதாரு மரங்களையும்,

புன்னை மரங்களையும்,

ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.

20அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்

இதைச்செய்தார் என்றும்

இஸ்ரயேலின் தூயவர்

அதைப் படைத்தார் என்றும்

மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;

ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்

21‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’

என்கிறார் ஆண்டவர்.

‘உங்கள் ஆதாரங்களை

எடுத்துரையுங்கள்’, என்கிறார்

யாக்கோபின் அரசர்.

22அத்தெய்வங்கள் அருகில் வந்து,

நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;

முன்னே நடந்தவற்றை

எடுத்துரைக்கட்டும்;

நாம் சிந்தித்து அவற்றின்

இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;

இல்லாவிடில் வரவிருப்பவற்றை

நமக்கு எடுத்துக்கூறட்டும்.

23“நீங்கள் தெய்வங்கள் என

நாங்கள் உணரும்பொருட்டு

வருங்காலத்தில் நடப்பனவற்றை

எங்களுக்குக் கூறுங்கள்;

நன்மையாவது தீமையாவது

செய்யுங்கள்;

நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு

திகைத்து நிற்போம்.

24இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை!

உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே!

உங்களைத் தேர்ந்துகொள்பவன்

வெறுக்கத்தக்கவன்”.

25நான் வடக்கிலிருந்து

ஒருவனை எழும்பச் செய்தேன்;

அவன் கதிரவன் உதிக்கும்

திசையிலிருந்து வந்துவிட்டான்;

அவன் என் பெயரைப் போற்றுவான்;

ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்

குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்

அவன் ஆளுநர்களை நடத்துவான்.

26நாங்கள் அறியும்படி

தொடக்கத்திலிருந்தே

இதை அறிவித்தவர் யார்?

‘அது சரி’ என்று

நாங்கள் சொல்லும்முன்னரே

உரைத்தவர் யார்?

அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;

முன்னுரைக்கவில்லை;

நீங்கள் பேசியதை

யாரும் கேட்டதுமில்லை.

27“இதோ வருகிறார்கள்” என்று

முதன்முதலில் சீயோனுக்கு

அறிவித்தது நானே!

நற்செய்தியாளரை எருசலேமுக்கு

அனுப்பியதும் நானே!

28நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;

எதையும் காணவில்லை;

அவற்றுள் அறிவுரை வழங்கவோ

என் வினாவுக்கு மறுமொழி தரவோ

எத்தெய்வமும் இல்லை.

29இதோ அவை அனைத்தும்

ஒன்றுமில்லாமையே!

அவற்றின் செயல்களும்

ஒன்றுமில்லாமையே!

அவற்றின் படிமங்களோ

வெறும் காற்றும் வெறுமையுமே!


41:8 2 குறி 20:7; யாக் 2:23.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks