back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 19 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 19 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு

1எகிப்தைக் குறித்த திருவாக்கு:

விரைவாய்ச் செல்லும்

மேகத்தின்மேல் ஏறி

ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்;

எகிப்தின் சிலைகள்

அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்;

எகிப்தியரின் உள்மனமோ

உருக்குலையும்.

2எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே

நான் கிளர்ந்தெழச் செய்வேன்.

அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக

உடன்பிறப்பும்

நண்பனுக்கு எதிராக நண்பனும்

ஒரு நகரத்தாருக்கு எதிராக

மற்றொரு நகரத்தாரும்

ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும்

மோதிக்கொள்வர்.

3ஆதலால், எகிப்தியர்

தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்;

அவர்கள் திட்டங்களைக்

குழப்பி விடுவேன்;

அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர்,

மைவித்தைக்காரர், குறிசொல்வோர்

ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.

4கடினமனம் கொண்ட

அதிகாரிகளின் கைகளில்

எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன்.

கொடுங்கோல் மன்னன் ஒருவன்

அவர்களை ஆள்வான், என்கிறார்

தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

5கடல் நீர் வற்றிப்போகும்;

பேராறு காய்ந்து வறண்டு போகும்;

6அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்;

எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில்

நீர் குறைந்து, வறண்டு போகும்;

கோரைகளும் நாணல்களும்

மக்கிப் போகும்.

7ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும்

உலர்ந்த தரையாகும்;

நைல் நதியின் அருகில் விதைத்த யாவும்

தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.

8மீனவர்கள் புலம்புவர்;

பேராற்றில் தூண்டில் போடுவோர்

அனைவரும் அழுவர்;

நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.

9மெல்லிய சணலாடை செய்வோரும்

வெண்பருத்தி நூலினால் நெய்வோரும்

வெட்கி நாணுவர்.

10நாட்டின் தூண்களாய் இருப்போர்

நசுக்கப்படுவர்;

வேலைக்கு அமர்த்தப்படுவோர்

உள்ளம் பதறுவர்.

11சோவானின் தலைவர்கள் மூடர்களே!

பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர்

அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்;

‘நான் ஞானிகளின் மகன்,

பண்டைக்கால அரசர்களின்

வழி வந்தவன்’ என்று

நீங்கள் ஒவ்வொருவரும்

பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?

12அப்படியானால் உன் ஞானிகள் எங்கே?

படைகளின் ஆண்டவர்

எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை

அவர்கள் அறிந்து

உனக்கு அறிவிக்கட்டும்.

13சோவான் தலைவர்கள்

அறிவிலிகள் ஆனார்கள்;

நோபு நகரின் தலைவர்கள்

ஏமாந்து போனார்கள்;

எகிப்தின் குல முதல்வர்கள்

அதை நெறிபிறழச் செய்தார்கள்.

14ஆண்டவர் அதனுள்

குழப்பம் உண்டாக்கும் ஆவி

புகுந்துவிடச் செய்தார்;

போதையேறியவன் வாந்தியெடுத்துத்

தள்ளாடுவதுபோல,

அவர்கள் எகிப்தை

அவன் செயல்கள் அனைத்திலும்

தள்ளாடச் செய்தார்கள்.

15எகிப்து நாட்டின் தலையோ,

வாலோ, ஈந்தோ நாணலோ

யாரும் எதுவுமே செய்தற்கு இராது.

எகிப்து ஆண்டவரை வழிபடுதல்

16அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள்.

17யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.

18அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று ‘கதிரவன் நகரம்’ என்று அழைக்கப்படும்.

19அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும்.

20எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.

21அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.

22ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.

23அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள்.

24அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.

25படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: ‘என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!’


19:1-25 எரே 46:2-26; எசே 29:1-32:32.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks