back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 10 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 10 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1அநீதியான சட்டங்களை

இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு!

மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை

எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!

2அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,

அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்;

எம் மக்களுள் எளியோரின் உரிமையை

அவர்கள் திருடுகின்றார்கள்;

கைம்பெண்களைக்

கொள்ளைப் பொருளாய் எண்ணிச்

சூறையாடுகிறார்கள்.

திக்கற்றோரை

இரையாக்கிக் கொள்கின்றார்கள்.

3தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்?

தொலைநாட்டிலிருந்து

அழிவாகிய சூறைக்காற்று வரும்போது

என்ன ஆவீர்கள்?

உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்?

உங்கள் செல்வங்களை

எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?

4கட்டுண்ட கைதிகளிடையே

தலை கவிழ்ந்து வருவீர்கள்;

இல்லையேல் வெட்டுண்டு

மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.

இதிலெல்லாம்

ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை.

ஓங்கிய அவரது சினக் கை

இன்னும் மடங்கவில்லை.

ஆண்டவரின் கருவி அசீரியா

5அசீரிய நாடு!

சினத்தில் நான் பயன்படுத்தும்

கோல் அது;

தண்டனை வழங்க

நான் ஏந்தும் தடி அது.

6இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு

அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;

எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க

அதற்கு ஆணை கொடுக்கிறேன்;

அம்மக்களைக் கொள்ளையிடவும்

அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,

தெருவில் கிடக்கும் சேற்றைப்போல

அவர்களை மிதித்துப் போடவும்,

அதற்குக் கட்டளை தருகிறேன்.

7அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,

அவனது உள்ளத்தில் எழும்

திட்டங்கள் வேறு;

மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்

தன் இதயத்தில் எண்ணுகிறான்;

பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த

அவன் விரும்புகிறான்.

8அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:

“என் படைத்தலைவர்கள்

ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?

9கல்னேர் நகர் கர்கமிசு நகர்

போன்ற தல்லவா?

ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு

இணையல்லவா?

சமாரியா நகர் தமஸ்கு நகரை

ஒத்ததல்லவா?

10சிறப்பு வாய்ந்த,

சிலைவணங்கும் அரசுகள் வரை

என் கை எட்டியிருக்கின்றது;

அந்நாட்டுச் சிலைகள்

எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட

எண்ணிக்கையில் மிகுதி.

11சமாரியாவையும்

அதிலுள்ள சிலைகளையும்

அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;

இப்படியிருக்க, எருசலேமுக்கும்

அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்

அவ்வாறே செய்யமாட்டேனோ?”

12எனவே சீயோன் மலைமேலும்

எருசலேமிலும் என் வேலைகள்

அனைத்தையும் முடித்தபின்,

ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்

சிந்தனையை முன்னிட்டும்,

இறுமாப்புடன் அவன் பேசிய

பேச்சுகளை முன்னிட்டும்

“அவனை நான் தண்டிப்பேன்”

என்கிறார் என் தலைவர்.

13ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:

“என் கைவலிமையாலே

நான் அதைச் செய்து முடித்தேன்;

என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்

அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;

மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள

எல்லைகளை அகற்றினேன்;

அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;

அரியணையில் வீற்றிருந்தோரை

ஒரு காளை மிதிப்பதுபோல்

மிதித்துப்போட்டேன்.

14குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்

என் கை மக்களினங்களின்

செல்வங்களைக் கண்டு

எடுத்துக்கொண்டது;

புறக்கணித்த முட்டைகளை

ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்

நாடுகள் யாவற்றையும்

ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.

எனக்கெதிராக ஒருவரும்

இறக்கை அடிக்கவில்லை.

வாய் திறக்கவில்லை,

கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”

15வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு

மேலாகக் கோடரி தன்னை

மேன்மை பாராட்டுவதுண்டோ?

அறுப்பவனைவிடத்

தன்னைச் சிறப்புமிக்கதாக

வாள் கருத இயலுமோ?

தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்

கைத்தடியால் கூடுமோ?

மரம் அல்லாத மனிதனைத் தூக்க

மரத்தால் ஆன கோலால் இயலுமோ?

16ஆதலால் தலைவராகிய

படைகளின் ஆண்டவர்

பாழாக்கும் கொள்ளை நோயை

அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே

அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்

தீ ஒன்றை வைப்பார்;

அவர் நெருப்பு மூட்டுவார்;

அது கொழுந்துவிட்டு எரியும்.

17இஸ்ரயேலின் ஒளியானவர்

நெருப்பாக மாறுவார்;

அதன் தூயவர்

தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்;

அது அவனுடைய முட்புதர்களையும்

நெருஞ்சி முள்களையும்,

ஒரே நாளில் சுட்டெரித்துச்

சாம்பலாக்கி விடும்.

18வனப்புமிக்க அவனுடைய காடுகள்,

செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள்

யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;

அது நோயாளி ஒருவன்

உருக்குலைவதை ஒத்திருக்கும்.

19அவனது காட்டில் மிகச் சில

மரங்களே எஞ்சியிருக்கும்;

ஒரு சிறுவன்கூட அவற்றை

எண்ணி எழுதிவிடலாம்.

எஞ்சியோரின் மீட்பு

20அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள்.

21யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.

22இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.

23ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார்.

அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு

24என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்;

25ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”.

26ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.

27அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.

பகைவனின் படையெடுப்பு

28பகைவன் அய்யாத்துக்கு எதிராகப்

போர் தொடுத்துள்ளான்;

அவன் மிக்ரோனைக்

கடந்து வந்துவிட்டான்;

மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை

வைத்திருக்கிறான்.

29கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;

கேபாவில் தங்கி

இரவைக் கழிக்கின்றார்கள்;

இராமா நகரின் மக்கள்

அஞ்சி நடுங்குகின்றார்கள்;

சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள்

ஓட்டமெடுக்கின்றார்கள்.

30பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;

இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;

அனத்தோத்தின் மக்களே,

மறுமொழி கூறுங்கள்.

31மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;

கேபிமினில் வாழ்வோர்

புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.

32இன்றே அப்பகைவன்

நோபு நகரில் தங்குவான்;

அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்

எருசலேமின் குன்றிற்கும்

எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.

33நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர்

அச்சுறுத்தும் ஆற்றலால்,

கிளைகளை வெட்டி வீழ்த்துவார்;

உயர்ந்தவற்றின் கிளைகள்

துண்டிக்கப்படும்;

செருக்குற்றவை தாழ்த்தப்படும்;

நிமிர்ந்து நிற்பவை

தரைமட்டமாக்கப்படும்.

34அடர்ந்த காட்டை அவர்

கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;

லெபனோன் தன் உயர்ந்த

மரங்களுடன் தரையிலே சாயும்.


10:5-34 எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15.
10:22-23 உரோ 9:27.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks