back to top
HomeTamilதொடக்கநூல் அதிகாரம் - 37 - திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 37 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யோசேப்பும் அவர் சகோதரரும்

1கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.

2யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே; யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.

3இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

4அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.

5யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத் தம் சகோதரருக்குத் தெரிவித்தார். இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.

6அவர் அவர்களை நோக்கி, “நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.

7நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின” என்றார்.

8அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி, “நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?” என்று கேட்டனர். இவ்விதக் கனவுகளின் காரணமாகவும் அவருடைய தகவல்களின் காரணமாகவும் அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.

9மேலும், அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்; அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றார்.

10இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, “நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?” என்று கேட்டார்.

11அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார்.

யோசேப்பு விற்கப்பட்டு எகிப்தை அடைதல்

12அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.

13இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்,” என்று கூற, அவர், “இதோ நான் தயார்” என்றார்.

14அவர் அவரிடம், “நீ போய் உன் சகோதரர், மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி” என்று சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார். அவரும் செக்கேமிற்கு வந்தார்.

15அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, “என்ன தேடுகிறாய்?” என்று அவரைக் கேட்டான்.

16யோசேப்பு, “என் சகோதரர்களைக் தேடுகிறேன். அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்” என்றார்.

17அதற்கு அம்மனிதன், “அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்” என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.

18தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.

19அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ, வருகிறான் கனவின் மன்னன்!

20நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்” என்றனர்.

21ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்” என்றார்.

22ரூபன் அவர்கள் நோக்கி, “அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்” என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.

23யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,

24அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.

25பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

26அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?

27வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில், அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்” என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

28ஆகையால், மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

29பின்னர், ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார். இதோ! யோசேப்பு அங்கே இல்லை. உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,

30தம் சகோதரரிடம் திரும்பி வந்து, “பையனைக் காணோமே! நான் எங்குச் சென்று தேடுவேன்” என்றார்.

31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர். ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.

32அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத் தம் தந்தையிடம் எடுத்துச் சென்று, “இதை வழியில் கண்டோம். இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்” என்றனர்.

33தந்தை அதை அடையாளம் கண்டு, “இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஐயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!” என்று நினைத்து,

34தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாள்களாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.

35அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், “நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்” என்று அவருக்காக அழுது புலம்பினார்.

36இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.


37:11 திபா 7:9.
37:28 திபா 7:9.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks