back to top
HomeTamilதொடக்கநூல் அதிகாரம் - 25 - திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆபிரகாமின் ஏனைய வழிமரபினர்
(1 குறி 1:32-33)

1ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.

2அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.

3யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.

4மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.

5ஆபிரகாம் தம்மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.

6ஆனால், அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆபிரகாமின் இறப்பு

7ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.

8அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து, நல்ல நரைவயதில் இறந்து, தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

9அவர் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.

10அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.

11ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார். பெயேர்லகாய்ரோயி என்ற இடத்தில் ஈசாக்கு வாழ்ந்து வந்தார்.

இஸ்மயேலின் வழிமரபினர்
(1 குறி 1:28-31)

12சாராவின் பணிப்பெண்ணும் எகிப்தியளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்:

13பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்; இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,

14மிசுமா, தூமா, மாசா,

15அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.

16இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள். பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள் தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.

17இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்; அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

18அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது. இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.

ஏசா, யாக்கோபின் பிறப்பு

19ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.

20ஈசாக்கிற்கு நாற்பது வயதான போது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.

21ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.

22ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் “எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.

23ஆண்டவர் அவரை நோக்கி,

“உன் கருப்பையில்

இரு இனங்கள் உள்ளன;

உன் வயிற்றிலிருந்தே

ஈரினத்தார் பிரிந்திருப்பர்.

ஓர் இனம் மற்றதைவிட

வலிமை மிக்கதாய் இருக்கும்.

மூத்தவன் இளையவனுக்குப்

பணிந்திருப்பான் என்றார்.

24அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.

25முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே, அவனுக்கு ‘ஏசா’ என்று பெயர் இட்டனர்.

26இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே, அவனுக்கு ‘யாக்கோபு’ என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.

ஏசா தலைமகனுரிமையை விற்றுவிடல்

27இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால், யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.

28ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.

29ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.

30அவன் யாக்கோபிடம், “நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு,” என்றான். அவனுக்கு ‘ஏதோம்’ என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.

31யாக்கோபு அவனை நோக்கி, “உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு” என்றான்.

32அவன், “நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?” என்றான்.

33யாக்கோபு, “இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றான். எனவே, ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.

34யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான். இவ்வாறு, ஏசா தன் தலைமகனுரிமையை அவமதித்தான்.


25:10 தொநூ 23:3-16.
25:23 உரோ 9:12.
25:33 எபி 12:16.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks