back to top
HomeTamilதொடக்கநூல் அதிகாரம் - 11 - திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 11 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாபேல் கோபுரம்

1அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.

2மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.

3அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.

4பின், அவர்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர்.

5மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.

6அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.

7வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார்.

8ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.

9ஆகவே, அது “பாபேல்” என்று வழங்கப்பட்டது. ஏனெனில், அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.

சேமின் வழிமரபினர்
(1 குறி 1:24-27)

10சேமின் தலைமுறைகள் இவையே; வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.

11அர்பகசாது பிறந்தபின் சேம் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

12அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.

13செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

14செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.

15ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

16ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.

17பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

18பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.

19இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

20இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.

21செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

22செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.

23நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

24நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.

25தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

26தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.

தெராகின் வழிமரபினர்

27தெராகின் தலைமுறைகள் இவையே; தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.

28ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.

29ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

30சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.

31தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.

32தெராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks